அரசியல்வாதிகள் போன் ஒட்டுக்கேட்பு.. மாஜி பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ ரெய்டு
பெங்களூர்: பெங்களூரு நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலோக் குமார் தற்போது கர்நாடகா காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார்.
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, பெங்களூர் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர் அலோக் குமார்.
ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள், பதவிகளை ராஜினாமா செய்ய ஆரம்பித்தனர். அப்போது ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க அலோக்குமார் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு இந்த பிரச்சினை வெளியே வந்தது. இதையடுத்து சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில் தான் அலோக்குமார் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட பெங்களூரிலுள்ள அலோக்குமாருக்கு தொடர்புள்ள பல்வேறு இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.