பெங்களூர் எல்லைதான்.. கடும் கெடுபிடி.. நடந்து சென்றாலும் அடித்து விரட்டும் போலீஸ்!
பெங்களூர்: பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளுக்கு தமிழகத்திலிருந்து செல்லக்கூடியவர்களின், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது நடந்து செல்வோரும் காவல்துறையினரால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றில் தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் கணிசமானோர், அருகேயுள்ள, தமிழகத்தின், ஓசூர் நகரில் வசித்தபடி, தினமும் பெங்களூர் சென்று வருவோரும் உண்டு.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கட்டணங்களை செலுத்தும்படி வற்புறுத்தும் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு
தமிழக நகரங்கள்
சென்னை, திருச்சி போன்ற ஊர்களிலிருந்து ஹாஸ்டலில் சென்று தங்கி அல்லது வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, வேலை செய்வோரும் உண்டு. கொரோனா வைரஸ் காரணமாக பலர் சொந்த ஊர் சென்று இப்போது பெங்களூர் திரும்பிய முயற்சிக்கும்போது பாஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
வெப்சைட்டில் பதிவு
இந்த நிலையில்தான், சேவா சிந்து என்ற வெப்சைட்டில் பதிவு செய்துகொண்டு, அதில், ஸ்லாட் கிடைத்தால், பெங்களூருவுக்கு வரலாம் என்று கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், ஸ்லாட் கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.
நடந்து செல்வோருக்கு அனுமதியில்லை
அதாவது, ஒரு நாளைக்கு இத்தனை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, அதற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், பலரும் நடந்து பெங்களூர் செல்வதற்குக் கூட முயற்சி செய்தனர். முன்பு, நடந்து செல்வோருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது நடந்து செல்வோர் காவல்துறையால் திரும்பவும் தமிழக எல்லைக்கு விரட்டி விடப்படுகிறார்கள்.
தடியடி
அதையும் மீறி செல்வோர் மீது காவல்துறை தடியடி நடத்துகிறது, இதனால் அவசர தேவைகளுக்கு பெங்களூர் செல்ல முடியாத நிலைமையில் எல்லையோர பகுதிகளில் உள்ள தமிழக மாவட்ட மக்கள் தவிக்கிறார்கள். சீனா எல்லையில்தான் பிரச்சினை என்றால், கர்நாடக எல்லையில், சக நாட்டு போலீசாரே இப்படி அடித்து விரட்டுகிறார்களே என கூறிச் செல்கிறார்கள் மக்கள்.