நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் - கர்நாடகா சிஐடி போலீஸ் அதிரடி நடவடிக்கை
Recommended Video
பெங்களூரு: சர்ச்சைக்குரிய தலைமறைவு சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக இண்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸை கர்நாடகா சிஐடி போலீசார் பிறப்பித்துள்ளனர்.
கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் நேரில் ஆஜராகாமல் 43 முறை வாய்தா வாங்கி இருக்கிறார் நித்தியானந்தா.
இதனையடுத்து இவ்வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து தெரிவிக்க கர்நாடகா சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருந்த நிலையில், நித்தியானந்தா எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது குறித்து தகவல் தெரிவிக்க சிபிஐ மூலமாக இண்டர்போல் உதவியை நாடியை உள்ளதாகவும் இதற்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா சிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே நித்தியானந்தாவுக்கு எதிராக குஜராத் போலீசாரும் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.