நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சித்தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், தனித்தனியாக, பூஜைகள் மற்றும் யாகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திடீரென 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் குமாரசாமி.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய 15 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் நடுவே, கடவுளே கதி என்ற நிலைமைக்கு முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா ஆகியோர் வந்துள்ளனர்.
Breaking News Live: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பெங்களூரில் உள்ள சங்கர மடம், சாரதா பீடத்தில் இன்று காலை குமாரசாமி, அவரது தந்தை தேவகவுடா, சகோதரர் ரேவண்ணா, உள்ளிட்ட குடும்பத்தார் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேநேரத்தில், பெங்களூரிலுள்ள கவிகங்காதேஸ்வரர் கோவிலில், எடியூரப்பா ருத்ர ஹோமம் என்ற சிறப்பு பூஜையை மேற்கொண்டார். இதன்பிறகு, நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழப் போவது உறுதி. இதற்காக கடவுளின் ஆசீர்வாதத்தை பெற வந்தேன் என்று தெரிவித்தார்.