குமாரசாமி அறிவிப்பால் கலக்கம்.. எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக ரிசார்ட்டுக்கு அனுப்பிய பாஜக
பெங்களூரு: கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள கர்நாடக அரசியல் களம், நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளதால், பிரதான கட்சிகள் தத்தம் எம்எல்ஏ-க்களை பாதுகாக்க துவங்கியுள்ளன. காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்களின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என குமாரசாமி கூறியிருப்பது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் அங்கீகரித்தால், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி அரசு தானாகவே கவிழ கூடிய சூழல் தான் நிலவுகிறது. இந்நிலையில் மெஜாரிட்டியைநிரூபிக்க தயார் என்ற குமாரசாமியின் அறிவிப்பால், தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை பாதுகாக்க அவர்களை ரிசார்ட்களில் மஜத, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்க வைத்துள்ளன.
தங்களது கட்சி எம்எல்ஏ-க்கள் யாருக்கும் இந்த இக்கட்டான சூழலில் விலை போய் விட கூடாது என, பல நடவடிக்கைளை அம்மாநில அரசியல் கட்சிகள் எடுத்துள்ளன.
Bengaluru: BJP MLAs reach Ramada resort from state assembly. #Karnataka pic.twitter.com/XIVScqqVrz
— ANI (@ANI) July 12, 2019
குமாரசாமி அறிவிப்பையடுத்து முதல் தடவை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்கள், கட்சி மாறுவார்கள் என்ற சந்தேகம் பாஜகவிற்கு எழுந்தது. இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியினர் உள்ளிட்ட யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி, சுமார் 105 உறுப்பினர்களில் 80 பேரை பாஜக, ரமடா என்கிற ரிசார்ட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது.
#Karnataka: JD(S) MLAs reach Prestige Golfshire Club in Bengaluru. pic.twitter.com/VfSQ5jIKWu
— ANI (@ANI) July 12, 2019
இதே போல எஞ்சியிருக்கும் எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜக பக்கம் தாவி விடாமல் இருக்க, மதார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை பிரெஸ்டீஜ் கோல்ஃப்ஷயர் கிளப் என்ற ரிசார்ட்டுக்கு கட்சி தலைமை அனுப்பியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த முதல்வர் குமாரசாமி, மனைவி அனிதா, சகோதரர் ரேவண்ணா ஆகியோர் மட்டும் தங்களது வீடுகளிலேயே தங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.