குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்!
Recommended Video
பெங்களூர்: ஜூலை 18 முதல் இன்று வரை கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ரெட் வார்னிங் கொடுத்துள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
கடந்த ஆண்டு, ஜூலை 14 ஆம் தேதி ஆரம்பத்தில் கேஆர்எஸ் மதகுகள் திறக்கப்பட்டன, அணை அதன் முழு நீர்த்தேக்க அளவான 124.8 அடியை எட்டியதால் கிட்டத்தட்ட 20,000 கன அடி என்ற அளவில், தண்ணீர் வெளியேற்றம் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. கடந்த சனிக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர் மட்டம் 90.03 அடியாகதான் இருந்தது.
கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்ட மழைப்பொழிவு அளவுப்படி, ஜூன் 1 முதல் 20 வரை குடகு மாவட்டத்தில் 640 மிமீ மழை பெய்ததாகவும் இது இயல்பை விட 48% குறைவாக இருப்பதும் தெரியவந்தது.
அந்த மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் மழைப்பொழிவு அளவு இயல்பான அளவை ஒப்பிடும்போது குறைந்துள்ளது தெரிகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தலைக்காவிரி அமைந்துள்ள, பாகமண்டலாவில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றின் நீர் வரத்து ஓரளவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் சூப்பர் மழையால், காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த கன மழை தொடர்ந்து அதிகரித்தால், இந்த வருடம் காவிரி பங்கீட்டில் கர்நாடகா-தமிழகம் நடுவே மோதல் போக்கு உருவாகாது. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தலக்காவேரி பகுதியில், 149.2 மிமீ மழை பெய்துள்ளது. கேரளாவில் வயநாடு பகுதியில் 92 மிமீ மழை பெய்துள்ளது. இதெல்லாம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளாகும்.
தற்போதைய நிலையில், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்துள்ளது.