கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்காக திறக்கப்படும் காவிரி நீரின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் கனமழை கொட்டி பெருவெள்ளம் ஏற்பட்டதால் அணைகள் வேகமாக நிரம்ப தொடங்கின. இதனையடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
பிலிகுண்டு வழியாக 3 லட்சம் கன அடிநீர் தமிழகத்துக்கு காவிரியில் நீர் வரத்து இருந்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
அணையின் நீர்மட்டம் 93 அடியை தொடும் நிலையில் கர்நாடகா நீர் திறக்கும் அளவை பெருமளவு குறைத்திருக்கிறது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மொத்தம் 49,292 கன அடி நீர் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது வெறும் 2,200 கன அடி மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.