"குர்ஆன் படிப்பவர்கள் பயங்கரவாதிகள்.. கொலை செய்வார்கள்!" கர்நாடக வலதுசாரி தலைவர் சர்ச்சை பேச்சு
பெங்களூர்: குரான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக வலதுசாரி தலைவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அங்குள்ள பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விவகாரம் அங்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்தே நிலைமை சற்று ஓய்ந்தது.
கர்நாடகா
அதைத் தொடர்ந்து சில வாரங்களில் ஹலால் கறி விவகாரம் பிரச்சினை ஆனது. அதாவது முஸ்லீம் வியாபாரிகள் ஹலால் செய்யப்படாத கறியையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பிரச்சினை கிளம்பியது. அடுத்ததாக அங்கு இந்து கோயிலுக்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாக கூறினர்.
சர்ச்சை
இதுபோல அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே குரான் குறித்து அங்குள்ள வலதுசாரி தலைவர் ஒருவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. குரான் மற்றும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக இந்து ஜாகரன் வேதிகே அமைப்பின் மாநில தலைவர் கேசவ் மூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார்
அஞ்சுமன்-இ-இஸ்லாமியா அமைப்பின் தலைவர் ஜமீர் அகமது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி உதய்பூர் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கேசவ் மூர்த்தி பேசியது தான் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
குர்ஆன்
அந்த போராட்டத்தில் பேசிய கேசவ் மூர்த்தி, "மனிதர்களைக் கொல்லுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால், குர்ஆனைப் படிப்பவர்களும் இதையே பின்பற்றுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா? குரானை படிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்" என்று கூறி இருந்தார். இரு பிரிவினருக்கும் இடையே பகைமையைத் தூண்டுவது உள்ளிட்ட பல பிரிவுகளில் கேசவ் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் எதற்கு
பாஜகவின் நுபூர் சர்மா இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி இருந்தார். இது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில், அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே நுபூர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறியதாகக் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தான் கேசவ் மூர்த்தி இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.