பாபர் மசூதி இடிப்பு விளையாட்டு- கர்நாடகா ஆர்.எஸ்.எஸ். தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
மங்களூரு: கர்நாடகாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்களை வைத்து பாபர் மசூதி இடிப்பு காட்சியை நடிக்க செய்த பள்ளியின் நிர்வாகியும் கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் .மூத்த தலைவருமான பிரபாகர் பட் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மங்களூரு அருகே பிரபாகர் பட் நடத்தி வரும் ஶ்ரீராம வித்யாகேந்திரா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதில், பாபர் மசூதி இடிப்பை விளக்கும் வகையில் மாணவர்களின் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிகழ்ச்சி மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரபாகர் பட் உள்ளிட்ட 5 பேர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.