நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது! மாஸ் பிளான்
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கு கோருகிறார்.
15 அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பின் பின்னணியில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராமல் ஆட்சி பெரும்பான்மையை இழந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு?
டி.கே.சிவகுமார் பேட்டி
இந்த நிலையில் ஆட்சியைக் காப்பாற்ற இரு வழிகளை காங்கிரஸ் கூட்டணி அரசு கையில் எடுக்கும் என்று, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநில ஆளும் கட்சி தலைவர்கள் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. கொறடா உத்தரவு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என்ற வார்த்தையை சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை. சட்டசபைக்கு செல்வதும், செல்லாததும் அவர்கள் விருப்பம், அதை கட்டாயப்படுத்த முடியாது என்றுதான் சொல்லியுள்ளது. இவ்வாறு சொல்லியதையே, அவர்களுக்கு எதிராக கொறடா உத்தரவை பிறப்பித்து சட்டசபைக்கு வரவழைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டதாக அர்த்தம் எடுக்க அவசியம் கிடையாது என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார்.
இது வேறு பிரச்சினை
தகுதி நீக்க வழக்கு என்பதே வேறு, கொறடா உத்தரவும் அதை மீறுவதால் ஏற்படும் தகுதி இழப்பும் வேறு பிரச்சனை. அது பற்றி உச்ச நீதிமன்றம் முன் கூட்டியே எப்படி சொல்லியிருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார். சட்டசபைக்கு போவதும், போகாததும் அதிருப்தி எம்எல்ஏக்கள் விருப்பம் என்று வேண்டுமானால் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கலாமே தவிர, கொறடா உத்தரவு அவர்களை கட்டுப்படுத்தாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவிக்கவில்லை. எனவே விப் உத்தரவை மீறினால் அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும். இதனால் அவர்கள் மீண்டும் அமைச்சராக முடியாது. இது தான் சட்டத்தில் உள்ள நிலை. இதை அதிருப்தி எம்எல்ஏக்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சிவகுமார்.
பிளான் பி
கொறடா உத்தரவை மீறியதாக தகுதி நீக்கம் செய்வது அரசை காப்பாற்ற ஒரு அஸ்திரம் என்றால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் பார்த்துக்கொண்டு, காலதாமதம் செய்வது மற்றொரு அஸ்திரமாக கூறப்படுகிறது. கர்நாடக சபாநாயகர், ரமேஷ்குமார், டிவி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நாளையே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் இடம் இல்லை. ஒருவேளை வாத விவாதங்கள் நீண்டு கொண்டே சென்றால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதை நான் யூகிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இழுத்தடிப்பு
ஆளும் கட்சி திட்டமும் இதுவாகத்தான் இருக்க கூடும். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர், தாக்கல் செய்துவிட்டு அதன் மீது பல கட்சி உறுப்பினர்களையும் பேச அவகாசம் கேட்டு, நாளை முழுக்க, பேசிப் பேசியே காலத்தை இழுத்தடித்து, வெள்ளிக்கிழமைக்கு சபையை ஒத்தி வைக்க செய்யலாம்.
கால அவகாசம்
ஒருவேளை வெள்ளிக்கிழமையன்றும், உறுப்பினர்கள், பேசிக்கொண்டே இருந்தால், அதன் பிறகு திங்கள்கிழமை தான் சட்டசபை கூடும். அதற்குள் அதிருப்தி எம்எல்ஏக்களை, எப்படியாவது சமாதானப்படுத்தி, சட்டசபை அழைத்து வந்து விடலாம் என்பது அடுத்த திட்டமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பாஜக அனுமதிக்காது. சட்ட சபையில் பெரும் போராட்டத்தில் இறங்க கூடும் என்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.