ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.. சீனியர் ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் தற்கொலை
பெங்களூர்: நிதி நிறுவன முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் பெங்களூரில் தனது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் ஐ மானிட்டரை அட்வைசரி (IMA) என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, முதலீடுகளை பெற்று வந்தது இந்த நிறுவனம்.
இந்தநிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2,500 கோடி அளவுக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மன்சூர் கான் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணையை தொடங்கியது. சிறப்பு விசாரணை குழு அனுப்பிய நோட்டீஸையடுத்து, கடந்த ஜூலை மாதம், துபாயில் இருந்து, இந்தியா திரும்பிய மன்சூர் முகமது மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.
கணவர் என்ன செய்கிறார்.. ஜன்னலில் எட்டி பார்த்த மனைவி.. அதிர்ச்சி.. அடுத்து நடந்த கொடுமை!
சிபிஐ விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய சீனியர் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான, ரோஷன் பெய்க், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்தது. இந்த விஷயத்தில் முகமது மன்சூர் கானுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் பெங்களூரு நகர மாவட்ட கலெக்டருமான விஜய் சங்கர் உதவிகரமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜாமீனில் வெளியே வந்த விஜய் சங்கர்
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, முகமது மன்சூர் கானுக்கு, விஜய் சங்கர் ஒத்துழைப்பு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விஜய் சங்கர் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்து இருந்தார். இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
பெங்களூர் வீடு
பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று இரவு 7 மணி அளவில் விஜய் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக திலக் நகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான மரணம்
விஜயசங்கர் எந்த ஒரு தற்கொலை குறிப்பும் எழுதி வைக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கூறுகையில், விஜய் சங்கர் மரணத்தை சந்தேகத்துக்கிடமான மரணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அடுத்த கட்ட விசாரணையில்தான் மேலதிக தகவல்கள் தெரிய வரும் என்று தெரிவித்தார்.