காஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்
பெங்களூரு: தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தாவின் மகனை கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
பல்வேறு நெருக்கடிகளால் காஃபி டே சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே காலகட்டத்தில் டி.கே.சிவகுமாரும் சிறைவாசம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தார். சிவக்குமாரும் சித்தார்த்தாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் உறவினர்களும் கூட. இந்த நிலையில் சித்தார்த்தாவின் மகன் அமர்த்யா ஹெக்டேவுக்கும் சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியாவுக்கு 26 வயதாகிறது. அமெரிக்காவில் படிப்பை முடித்த பின்னர் தாயார் மாளவிகாவுடன் இணைந்து குடும்ப நிறுவனங்களை கவனித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான 22 வயதாகும் ஐஸ்வர்யா, தந்தை சிவக்குமாரின் குளோபல் அகாடெமி ஆப் டெக்னாலஜி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
பொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்!
இது தொடர்பாக டி.கே. சிவகுமார் கூறுகையில், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற ஒன்று. எல்லாம் கடவுளின் ஆசீர்வாதத்தால் நடைபெறுகிறது. சித்தார்த்தா மறைவால் ஓராண்டு காத்திருக்க முடிவு செய்திருந்தோம். இப்போது நேரம் கை கூடி இருக்கிறது என கூறினார். இந்த திருமணம், சித்தார்த்தா தற்கொலை செய்வதற்கு முன்னரே பேசி முடிக்கப்பட்டதுதானாம்.
சிவகுமாரின் சதாசிவா நகர் வீட்டில் கடந்த ஞாயிறன்று இரு குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணத்தை நடத்துவது என முடிவு செய்திருக்கின்றனர். இந்த திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அண்மையில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பா பேத்தி ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் தலைவர்கள் இல்ல 2-வது திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.