பாஜக சீன்லயே இல்லை.. சித்தராமையா, குமாரசாமி பயங்கர மோதல்.. பரபரப்பில் கர்நாடக அரசியல்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக, சில மாதங்கள் முன்பு வரை, கூட்டணி ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இரு பெரும் தலைவர்களான, சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் நடுவே பொது வெளியில், மோதல் வெடித்துள்ளது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது.
பாஜக 104 தொகுதிகளுடன்தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது. எனவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவுக்கு வந்தன. மஜதவின் குமாரசாமி முதல்வர் ஆக்கப்பட்டார்.
குமாரசாமி அரசு
அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்தனர். இதில் காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லை. மேலிடத்தில் நிர்பந்தத்தால் வேறுவழி இன்றி சம்மதித்தார். இந்த நிலையில்தான், சில மாதங்கள் முன்பாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில், மொத்தம் 17 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
தனித்து போட்டி
தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. காலியாக உள்ள 17 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடா அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ், மஜத கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே, முடிவுக்கு வந்துவிட்டது.
ஆரம்பித்து வைத்த சித்தராமையா
எனவே இத்தனை காலமாக மனதில் வைத்திருந்த ஆவேசத்தை வெளிப்படுத்தி விட்டார் சித்தராமையா. கடந்த செவ்வாய்க்கிழமை காலை சித்தராமையா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், குமாரசாமியை நம்பிக்கையான கிளி என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் அந்த கிளி காங்கிரசை கொத்தி விட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும் இது ஒரு நல்ல பாடம் என்றார் அவர்.
அடுத்த கட்சியில் அரசியல்
இதனால் கோபமடைந்த குமாரசாமி, சித்தராமையா போன்று பல கிளிகளை, தேவகவுடா வளர்த்துள்ளார். ஆனால் அவர் முதுகில் தான் குத்தினார்கள். சித்தராமையாவின் உதவியால் நான் முதல்வர் ஆகவில்லை. காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நான் முதல்வராக இருந்ததை, சித்தராமையாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது அரசை கவிழ்ப்பதில் அவர் வெற்றி. பெற்றுள்ளார். நாங்களாவது ஒரு மாநிலக் கட்சியை உருவாக்கி நடத்தி வருகிறோம். சித்தராமையா சொந்தமாக ஒரு கட்சியைத் துவங்கி நடத்தட்டும் பார்க்கலாம். பிறரின் ஆதரவு மற்றும் பணத்தில்தான் சித்தராமையா அரசியல் நடத்தி வருகிறார், என்று கடுமையான தாக்குதலை பதிலளித்தார்.
தனி செல்வாக்கு
சித்தராமையாவும் விடவில்லை. பதிலுக்கு அவர் அளித்த பேட்டியில், பொதுமக்களை பயன்படுத்திக் கொண்டு அவர்களை கைவிடுவது குமாரசாமி வாடிக்கை. குமாரசாமிக்கு திறமை இருந்தால் எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி தனித்து அவர் ஒரு முறையாவது முதல்வராகி காட்டட்டுமே பார்க்கலாம் என்றார்.
இதற்கு பதிலடியாக குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காரம் குறையவில்லை.
நீங்கள்தான் வந்தீர்கள்
குமாரசாமி கூறியுள்ளதை பாருங்கள்: காங்கிரசின் முன்னணி தலைவர்களை ஒதுக்கிவிட்டு சித்தராமையா எப்படி அந்த கட்சியில் முதல்வராக முன்னுக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நான் சொந்தமாக எங்கள் கட்சி வெற்றியை மட்டுமே வைத்துக்கொண்டு முதல்வரானதாக, எப்போதுமே சொல்லவில்லை. ஒருமுறை பாஜக ஆதரவாலும், பிறகு காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவாலும் முதல்வரானேன். அவர்கள் என்னை பயன்படுத்திக்கொண்டு புறம் தள்ளி விட்டனர். என்னை முதல்வராக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளுக்கு நான் செல்லவில்லை. அவர்கள்தான் எனது வீட்டுக்கு வந்து கூட்டணி பேரம் பேசினார், என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நேரடி போட்டி
இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் நடுவேயான இந்த வார்த்தைப் போர், இடைத் தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் நடுவேயான போராக உருமாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். எப்படியோ, ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற மனநிலையில் கர்நாடக பாஜக தலைமை சந்தோஷமாக இருக்கிறது.