தமிழகத்தில் என்ன நடந்தது தெரியுமா? சட்டசபையில் சீறிய சித்தராமையா
Recommended Video
பெங்களூர்: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு, ஆதரவளிக்கவில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்ததற்கு, தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உள்ளது என்று கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குழு தலைவர் சித்தராமையா எச்சரிக்கைவிடுத்தார்.
குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின்மீது சித்தராமையா இன்று சட்டசபையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்ததற்காக எம்எல்ஏக்கள், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
விப் மீறவில்லை
இத்தனைக்கும் அவர்கள் விப் உத்தரவை மீறவில்லை. தங்கள் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை. அப்படி இருந்தும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகருக்கு அரசியல் சாசனத்தில் அந்த அளவுக்கு அதிகாரம் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோதும் கூட சபாநாயகர், முடிவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்தது.
கர்நாடக நிலைமை
ஆனால், கர்நாடகாவில் விப் உத்தரவை மீறியதற்காகவும், தீய நோக்கத்தோடு பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதிருப்தியாளர்கள் மீது எளிதாக நடவடிக்கை பாயும். அதற்கான வாய்ப்பு உள்ளது.
உள்நோக்கம் போதும்
தமிழகத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்து செயல்படுகிறார் என்ற சந்தேகமே தகுதி நீக்கத்துக்கு போதுமானதாக இருந்தது. எனவே, கர்நாடகாவிலும் எம்எல்ஏக்களின் ராஜினாமாவின் உள் நோக்கம் மட்டுமே அவர்களின், தகுதி நீக்கத்திற்கு போதுமானது. இவ்வாறு சித்தராமையா பேசினார்.
சித்தராமையா கோரிக்கை
அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் சித்தராமையா ஏற்கனவே மனு அளித்திருந்தார். இந்த நிலையில், அவரின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கை தொனி சித்தராமையா பேச்சில் தென்பட்டது.