கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களில் வென்றது; காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டும் வென்றது. ஒரு தொகுதியில் சுயேட்சை வென்றுள்ளார்.
இதனையடுத்து முதல்வர் எடியூரப்பா அரசுக்கு முழுமையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சியை தக்க வைக்க முடியும் என்கிற நிலை இருந்தது.
இதனால் எப்படியும் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என வியூகம் வகுத்து காத்திருந்தது காங்கிரஸ். ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாகின.
இது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சித்தராமையா இன்று ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மக்களின் தீர்ப்பை தாம் தலைவணங்கி ஏற்பதாக கூறியுள்ளார்.
தினேஷ் குண்டுராவ் ராஜினாமா
இதனிடையே கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.