கர்நாடாகாவை கலக்கிய 'சிங்கம்' போலீஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா... மக்கள் அதிர்ச்சி!
பெங்களூர்: காவல் துறை பதவியிலிருந்து விலகுவதாக கர்நாடகாவின் சிங்கம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெங்களூர் தெற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வருபவர் அண்ணாமலை. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை சேர்ந்த இவர் 2011ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
கர்நாடாகாவிலுள்ள கர்கலா பகுதியின் ஏ.எஸ்.பி.,யாக காவல்துறையில் பணியை துவங்கினார். கடந்த 2013ம் ஆண்டு உடுப்பியில் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சிக்மகளூர் எஸ்.பி.,யாகவும் பணியாற்றினார்.
உடுப்பி எஸ்.பி.யாக இருந்தபோது, இவரை அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தினர். அந்தளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
தான் பணிபுரிந்த இடங்களில் குற்றங்களை ஒழிப்பதில் அதிரடி காட்டினார். இதனால், மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரியாக வலம் வந்தார். அத்துடன்,அம்மாநில மக்களால் கர்நாடாகவின் சிங்கம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இந்தநிலையில், இன்று தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்," தனது பதவி விலகல் குறித்த ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக கூறி இருக்கிறார். இந்த ராஜினாமா முடிவை தீர ஆய்ந்து எடுத்ததாகவும்தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மானசரோவர் யாத்திரை சென்றபோது வாழ்வின் திருப்பத்தை உணர்ந்தேன். என்னுடன் பணியாற்றிய மதுகர் ஷெட்டியின் திடீர் மறைவு என்னுடைய வாழ்க்கையை சுயபரிசோதனை செய்யும் அவசியத்தை உணர்த்தியது. அப்போது என்னால் முடிந்த நற்காரியங்களை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சிறிது காலம் குடும்பத்தினருடன் செலவிட திட்டமிட்டுள்ளேன். என் வீட்டில் இருக்கும் கால்நடைகளிடம் அன்பு செலுத்தப் போகிறேன். என்னுடன் பயணித்த அதிகாரிகள், கீழ் பணியாற்றிய காவலர்களின் அன்பை கண்டிப்பாக இழக்க நேரும். பணிக்காலத்தில் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
அண்ணாமலையின் ராஜினாமா முடிவு கர்நாடக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் அவர் பணிபுரிந்த பகுதிகளை சேர்ந்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருவதுடன், அவரது நற்செயல்களை நினைவுகூர்ந்து பாராட்டி உள்ளனர்.
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதற்கு மூன்று, நான்கு மாதங்கள் பிடிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனிடையே, காவல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ள அண்ணாமலை சிறிய இடைவெளிக்கு பின்னர் அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாக சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.