அடுத்த திருப்பம்.. அவசரமாக முடிவெடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் முறையீடு
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் திடீரென ஒரு மனு தாக்கல் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களில் 10 பேர், சபாநாயகரின் செயலாளரிடம் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துவிட்டு மும்பை ஹோட்டலில் தங்கி உள்ளனர்.
நேற்று வரை ராஜினாமா செய்த கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை என்பது 16 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்த 10 பேரும் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரோத்தகி 10 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை உடனடியாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கர்நாடக அரசியலில் அடுத்து என்ன..? இந்த 4 விஷயங்களில் ஒன்றுதான் நடக்கும்!
இதையடுத்து, இன்று மாலை 6 மணிக்குள் 10 எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து நேரில் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் இருந்தவர்கள் பெங்களூரு கிளம்பியுள்ளனர். அவர்கள் கிளம்பிய விமானம், பெங்களூர் வந்து சேர்வதற்கு முன்பாக சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், எம்எல்ஏக்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் ராஜினாமா செய்தார்களா, அல்லது வற்புறுத்தலின் பெயரில் இது நடந்ததா என்பது குறித்தெல்லாம் விரிவாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே, அவசரகதியில் ராஜினாமா கடிதங்களை ஏற்பது இயலாத காரியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு, சபாநாயகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை மறுத்த உச்ச நீதிமன்றம், நாளை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது இன்று சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று அழுத்தம் வந்துவிட்ட நிலையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக சபாநாயகரும் உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம் கர்நாடக அரசியல் விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் கைகளுக்குள் சென்றுள்ளது.