'ஹெல்' என்று சொல்வதா.. சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
டெல்லி: சபாநாயகரின் செயல்பாடு மற்றும் அவரின் பேச்சு தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்று பெங்களூரில் பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ்குமாரிடம், நிருபர்கள் கேட்டபோது "ஒய் தி ஹெல் தே ஆர் கோயிங் டு சுப்ரீம்கோர்ட்". அவர்கள் என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே என்று பதிலளித்தார்.
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று 10 எம்எல்ஏக்கள் நேரில் வந்து அவரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்த போதிலும் இதுவரை அவர்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்கவில்லை.
"ஒய் தி ஹெல்.." அதிருப்தி எம்எல்ஏக்கள் பற்றி சபாநாயகர் ஆவேசம்.. உள்நோக்கம் இருப்பதாக பரபரப்பு பேட்டி
இந்த நிலையில் எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.
அப்போது ஒய் தி ஹெல் என்ற ஒரு வார்த்தையை எம்எல்ஏக்களை நோக்கி சபாநாயகர் கேட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு எம்எல்ஏக்கள் செல்வது தவறா? சபாநாயகர் இது போன்ற வார்த்தைகளை இதுவரை பேசியது மரபு கிடையாது. தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திக்க செல்ல எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர். ஆனால் சபாநாயகர் அதற்கு இடையூறாக இருக்கிறார்.
ராஜினாமா கடிதங்களை ஏற்பதற்கு வேண்டுமென்றே சபாநாயகர் காலதாமதம் செய்கிறார். சபாநாயகர் இரு குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு இருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சபாநாயகர் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
இவ்வாறு முகுல் ரோத்தகி வாதம் முன் வைத்தார்.