"ஒய் தி ஹெல்.." அதிருப்தி எம்எல்ஏக்கள் பற்றி சபாநாயகர் ஆவேசம்.. உள்நோக்கம் இருப்பதாக பரபரப்பு பேட்டி
பெங்களூர்: உச்சநீதிமன்றத்தை அதிருப்தி எம்எல்ஏக்கள் அணுகியுள்ளதை வைத்து பார்க்கும்போது சந்தேகமாக உள்ளதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 6 மணிக்குள் 10 எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து நேரில் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று மதியம் சுமார் இரண்டு 2.45 மணி அளவில், தலைமை செயலகமான விதாசவுதாவிலிருந்து வெளியே கிளம்பினார் சபாநாயகர். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றம் செல்ல அவசியமே இல்லை. நான் எப்போதுமே அவர்களை சந்திக்க மறுக்கவில்லை.
நேரடியாகவே அவர்கள் என்னை வந்து சந்தித்து இருக்க முடியும். why the hell they are going to supreme court என்றார்.
மேலும், இவ்வாறு அவர்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதன் மூலம் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்து உள்ளது என்றார்.
அடுத்த திருப்பம்.. அவசரமாக முடிவெடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக சபாநாயகர் முறையீடு
அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு எடுப்பதற்கு நீங்கள் அதிக கால அவகாசம் எடுப்பதால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனரே, என்று கேட்டனர்.
அதற்கு, "என்னுடைய பணியை எப்படி செய்யவேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித் தர அவசியம் கிடையாது" என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றார் சபாநாயகர் ரமேஷ் குமார்.
கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சபாநாயகரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவின் சாராம்சம் ஆகும். ஆனால் நாங்கள் காட்சியிலேயே தான் இருக்கிறோம் என்று திரும்பத் திரும்ப அதிருப்தி எம்எல்ஏக்கள் சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் எம்எல்ஏக்களின் நடவடிக்கை, உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று, இன்று சபாநாயகர் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க அஸ்திரம் பாயும் என்ற அறிகுறியாகவே சபாநாயகரின் இந்த பேட்டி பார்க்கப்படுவதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.