சபாநாயகர் முடிவால் குஷியில் எடியூரப்பா.. ஆட்சியை காப்பாற்ற சூப்பர் சான்ஸ்!
Recommended Video
பெங்களூர்: மொத்தம் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை கர்நாடக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பதன் மூலம், எடியூரப்பா ஆட்சி தப்பிப்பதற்கு ஒருவகையில் அது உதவிகரமாக மாறியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மொத்தம் 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதில் 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியையும், 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
ஆக மொத்தம், ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து, அரசு கவிழ காரணமாக இருந்த அனைத்து எம்எல்ஏக்களும் தற்போது மாஜி எம்எல்ஏக்களாக, மாற்றப்பட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
புதிதாக, பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், சபாநாயகர் நேற்று அதிருப்தி எம்எல்ஏக்கள், அனைவரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு முக்கியமான காரணம், இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் நிதி மசோதா நிறைவேறிய பிறகு சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தில் உள்ளதுதான். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சபாநாயகர், பாஜகவில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது சந்தேகம்.
அதிருப்தியாளர்களுக்கு சிக்கல்
எப்படியும் கூட்டணி ஆட்சி கலைந்து விட்டது. எனவே அதற்கு காரணமான எம்எல்ஏக்களை பழிவாங்கியே தீரவேண்டும் என்பதுதான், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் சபாநாயகரிடம் இத்தனை தூரம் வலியுறுத்துவதற்கு முக்கிய காரணம். சபாநாயகரும், அதை ஏற்று தகுதி நீக்க அஸ்திரத்தைப் பயன்படுத்தி உள்ளார். இது அதிருப்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவு என்ற போதிலும், மற்றொரு பக்கமும், புதிதாக ஆட்சி அமைத்துள்ள எடியூரப்பாவுக்கு எளிதான பாதை திறந்து விடப்பட்டுள்ளது.
சட்டசபை பலம்
மொத்தம் 224 பேர் கொண்டது கர்நாடக சட்டசபை. அதில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே சட்ட சபையின் மொத்த பலம் 207 என்ற அளவில் குறைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைக்க முடியும்.
உதவிதான்
அதாவது 104 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் ஆட்சி தொடரும். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இது தவிர ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவளிக்கிறார். எனவே 106 எம்எல்ஏக்கள் பலத்துடன், பாஜக வெற்றி பெற்றுவிடும். அதற்கு இந்த தகுதி நீக்கம் ஒரு வகையில் உதவி செய்யப் போகிறது என்பது உண்மை.