பெங்களூரில் இலவச சித்த மருத்துவ முகாம்.. கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கம் அசத்தல்
பெங்களூர்: சித்த மருத்துவ ஆய்வு மையம், பெங்களூரு மற்றும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிலவேம்பு குடிநீர் வழங்கல் முகாம் நடத்தி அசத்தியுள்ளன.
இன்று காலை 11.00 மணி பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இந்த நிகழ்வு ஆரம்பித்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சித்த மருத்துவவ ஆய்வு குழுமத்தின் பெங்களூர், சித்த மருத்துவ ஆய்வு மையம், ஆராய்ச்சி அலுவலா்(பொறுப்பு), டாக்டர்.மீ.ஹரிஹர மகாதேவன் தலைமை வகித்தார்.
விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர் டாக்டர்.வி.டில்லிபாபு, (ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), பெங்களூரு), இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் செயலாளர் ஆ.வி.மதியழகன் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர் இரா.வினோத் நன்றியுரையாற்றினார். சங்கத்தின் பொருளாளர் க.தினகரவேலு மற்றும், ஏ.சாந்தகுமார் உள்ளிட்ட துணை செயலாளர்கள் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை, கர்நாடக தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் ந.முத்துமணி திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம், முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிங்கால் வாதம் மற்றும் அனைத்து வகையான வாத நோய்களுக்கும், சோரியாஸிஸ், வெண்குஷ்டம் மற்றும் அனைத்து தோல் நோய்கள், அல்சர், மாதவிடாய் கோளாறு போன்றவற்றுக்கு, சித்த மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
அதேபோல டெங்கு பாதிப்பை தடுக்க நிலவேம்பு குடிநீர் இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.