பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை எடுக்க கூடாது.. அர்ச்சகர்களுக்கு கர்நாடக அரசு நூதன உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ளது காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு.
அதேநேரம், கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஆரத்தி கொண்டுவரும்போது தட்டில் வைக்கும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம், 34,000த்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இயங்கி வருகின்றன. கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரிக்கையை அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பல ஆண்டுகளாக வைத்து வந்தனர்.
இந்நிலையில் மாநில அரசு நேற்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும். பக்தர்கள் ஆரத்தி தட்டில்போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிக்கையாக வரும் பணம் அரசுக்கு சென்று, அதில் இருந்தே, அர்ச்சகர்களுக்கு கூடுதல் சம்பளப் பணத்தை ஈடுகட்டிவிடலாம் என அரசு நினைப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.