தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு10,000 கனஅடி நீர் திறப்பு
பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு படிப்படியாக அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தலா 5,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரி படுகையில் மழையின் அளவை பொறுத்தும், அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டிஎம்சி, ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சியையும் சேர்த்து மொத்தமாக 40.43 டி.எம்.சி நீரை கர்நாடகா திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் தங்கள் மாநிலத்தில் பருவமழை ஆரம்பித்து நன்றாக மழை பெய்ய துவங்கினால் தான், தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவோம் என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து ரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்தது. இதனால் 13 டிஎம்சி இருந்த அணைகளின் கொள்ளளவு தொடர்ந்து உயர்ந்தது.
இதனையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உத்தரவுப்படி கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 855 கனஅடி தண்ணீர் மட்டுமே முதல் நாள் திறக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கேஆர்எஸ் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,199 கனஅடியிலிருந்து 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று காலை வந்தடைந்தது. காவிரி நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.