குமாரசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா?... கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Recommended Video
பெங்களூர்: இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என சட்டசபையில் குமாரசாமி அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் இரு நாட்கள் ஆளும் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.
எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு
இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சபாநாயகர், இன்று மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக் கொள்ளுமாறு எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டார்.
பதவி ராஜினாமா?
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தீர்ப்புக்குப் பின்னரே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆளும் கூட்டணி கட்சிகள் கோரியுள்ளன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்க மறுத்ததுடன், நெருக்கடி கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
கடும் கூச்சல் குழப்பம் இடையே நேற்று நள்ளிரவு 11.45 மணிவரை நீடித்த சட்டமன்றத்தை காலை 10 மணிக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார். இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
யாருக்கு வெற்றி?
கர்நாடக சட்டசபையில் தற்போது பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளுக்கு 99 எம்எல்ஏக்களே உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் வாக்கெடுப்பு நடைபெற்றால் குமாரசாமி அரசு கவிழும் சூழல் உள்ளது.