ஷாக்கிங்.. எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை.. 23 ஏக்கர் ஏரி நீரை காலி செய்த கிராம மக்கள்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாகீர்தார் ஏரியில் எய்ட்ஸ் பாதித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதால் பீதியில் 23 ஏக்கர் ஏரி நீரை அந்த கிராமத்தினர் வீணடித்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூப்லி மாவட்டத்தில் உள்ள மோரப் கிராமம். இங்கு ஜாகீர்தார் என்ற ஏரி உள்ளது. அப்பகுதியினர் 1000 பேர் அந்த ஏரியில்தான் குடிநீரை குடித்து வருகின்றனர்.
மேலும் கால்நடை மேய்ச்சலுக்கும் இந்த ஏரி நீர்தான் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த ஏரியில் கடந்த வாரம் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. அவர் எய்ட்ஸ் நோயாளி என கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலில் பாதியை மீன்கள் தின்றுவிட்டன.
புறக்கணிப்பு
பார்ப்பதற்கே மிகவும் கோரமாக இருந்தது. இந்த சம்பவம் ஊர் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்து தண்ணீர் எடுப்பதை மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து தினமும் 3 கி.மீ. தூரம் சென்று தண்ணீரை எடுத்து வந்தனர். இதையடுத்து அந்த தண்ணீரை வெளியேற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரசு அதிகாரிகள் அந்த கிராம மக்களை சந்தித்து எச்ஐவி பாதித்த ஒருவர் இறந்து விட்டால் அந்த கிருமியும் இறந்துவிடும். அது தண்ணீரிலும் காற்றிலும் உயிர் வாழாது என்றும் விளக்கினர்.
வெளியேற்ற
வேண்டுமானால் அந்த நீரை சோதனை செய்து அது பாதுகாப்பாக இருந்தால் அவற்றை பயன்படுத்துங்கள் என அதிகாரிகள் கூறினர். எனினும் கிராமத்தினர் அதற்கு ஒத்து வரவில்லை. மாறாக 8 லாரிகளை கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் நீரை வெளியேற்ற முயன்றனர்.
4 மோட்டார்கள்
அப்போது அதிகாரிகள் தடுத்தனர். இந்த ஏரி நீரை அரசு வடிக்காவிட்டால் நாங்கள் வாடகைக்கு எடுத்த டேங்கர் லாரிகளை கொண்டு அந்த நீரை வெளியேற்றுவோம் என பிடிவாதம் பிடித்தனர். வேறு வழியில்லாததால் அரசு அதிகாரிகள் 20 டியூப்களை கொண்டு 4 மோட்டார்கள் மூலம் உறிஞ்சி தண்ணீரை வெளியேற்றினர்.
|
தேவையற்ற பீதி
பின்னர் அந்த ஏரிக்கு மலபிரபா கால்வாயிலிருந்து நீர் நிரப்பப்பட்டது. இதுகுறித்து தொற்றுநோய் மற்றும் நெஞ்சக துறை இயக்குநர் நாகராஜன் கூறுகையில் மக்கள் பீதி அடைவதற்கு விஞ்ஞான ரீதியில் ஒன்றும் இல்லை. தண்ணீரில் எச்ஐவி கிருமிகள் இருக்கும் என நம்புவது தவறு. எச்ஐவி வைரஸ்கள் 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 8 மணி நேரத்துக்கு மேல் உயிருடன் இருக்காது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்கையில் அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு 6 நாட்கள் ஆகிவிட்டது. எனவே இது தேவையற்ற பயம் என்றார்.