தங்க கடத்தல்: ஸ்வப்னா,சந்தீப் நாயர் கொச்சி கோர்ட்டில் ஆஜர் - 14 நாள் நீதிமன்ற காவல்- கொரோனா சோதனை
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு ஆணையம் (NIA) என்ஐஏ சனிக்கிழமை பெங்களூருவில் கைது செய்தது. அவருடன் பதுங்கியிருந்த அவரது நண்
கொச்சி: தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருக்கும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
நாட்டையே உலுக்கியுள்ள கேரள தங்கக்கடத்தல் விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கடந்த வாரம் சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை சோதனை செய்த போது அதில் 30 கிலோ தங்கம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என்பதும் தெரியவந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த தங்கக்கடத்தில் கேரளா அரசியலில் பரபரப்பை பற்ற வைத்தது. முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் சோதனையாக மாறியது காரணம் ஸ்வப்னா வேலை செய்த இடம் அப்படி. பினராயி விஜயன் கீழே இயக்கும் தகவல் தொழில் நுட்ப பிரிவில் வேலை செய்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பின. சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எந்த விசாரணைக்கும் தயார் என்றார் பினராயி விஜயன். இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டது.
கடத்தல் தங்க வழக்கு
தங்கக்கடத்தல் வழக்கை ஆரம்பம் முதலே படு விறுவிறுப்பாக விசாரித்து வருகிறது என்ஐஏ. கடத்தல் தங்கம் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ஐஏ வளையத்தில் நால்வர்
இந்த வழக்கில், என்ஐஏ முதல் குற்றவாளியாக தூதரக அலுவலகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் சரீத்குமார் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்பட்டார். இதனையடுத்து தூதரகத்திற்கு சரக்குகளை அனுப்பிய முன்னாள் துணைத் தூதரக செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் மற்றும் ஷார்ஜாவைச் சேர்ந்த பாசில் ஃபரீத் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் மீது எப்ஐஆர்
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எஃப்.ஐ.ஆரில், கடத்தப்பட்ட தங்கத்தின் வருமானம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
ஸ்வப்னா கைது
இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக இருந்த ஸ்வப்னா கடந்த ஆறு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் பெங்களூரில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்திருந்தனர். தமிழகத்தில் தேடி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஸ்வப்னாவின் செல்போன் பேச்சுக்களை ட்ராக் செய்த என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
சந்தீப் நாயர் கைது
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சந்தீப் நாயரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப்பை கைது செய்த அதிகாரிகள் அவரையும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அதற்கு முன்னதாக இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சந்தீப் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவரையும் இன்று கொச்சிக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஸ்வப்னா, சந்தீப் நாயரை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் என்ஐஏ போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இந்த தங்கக் கடத்தல் வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது இதுவரை எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவரும்.
14 நாள் நீதிமன்ற காவல்- கொரோனா சோதனை
இதனிடையே ஸ்வப்னா, சந்தீப் நாயர் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது, முதல் கட்டமாக இருவரும் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இருவருக்குமான கொரோனா பரிசோதனை முடிவுகள் நாளை வெளிவரும். இதன் அடிப்படையில் இருவருக்கும் என்ன கஸ்டடி என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.