எங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம்.! இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா
பெங்களூரு: எதிர் வரும் காலங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது சொந்த சக்தியை கொண்டு, தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வாரக இருந்து வருகிறார். கூட்டணி ஆட்சி என்பதால் இரு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கர்நாடக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டன. ஆனால் இந்த கூட்டணிக்கு மக்களவை தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. இரு கட்சிகளுக்குமே தலா ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. இதனால் இரு கட்சிகளை சேர்ந்தவர்களுமே கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தோல்விக்கு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதே காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் நிறைய தொகுதிகள் வென்றிருக்கலாம் என இரு கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றதற்கு மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தேவகவுடா ஒருபடி மேலே சென்று, தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் அக்கட்சி அதிர்ந்தது.
மேலும் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா கூட்டணி ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என யாருக்கும் தெரியாது என கூறி சர்ச்சையை அதிகப்படுத்தினார். இனிடையே கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் தன் கட்சி உறுப்பினர்களை அதிகளவில் வெற்றி பெற செய்ய திட்டமிட்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம், தொண்டர்களுடன் கலந்தாலோசனை, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் என தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளார் தேவகவுடா.
இந்நிலையில் மஜத கட்சியின் மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தேவகவுடா, எந்த ஒரு தேர்தலிலும் நமது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமெனில், அதற்கு பெண்களின் ஆதரவு தேவை. எனவே தேர்தலின் போது பெண் நிர்வாகிகள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மஜத கட்சிக்கென மக்களிடம் தனி செல்வாக்கு உள்ளது. அதை இழக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களவை தேர்தல் முடிவுகளில் இருந்து நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்.
தற்போது எங்கள் கட்சியின் சக்தி என்னவென்பதை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். எனவே இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் மஜத தனது சொந்த சக்தியை பயன்படுத்தி, கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடும். இனி மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளார்.