தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு 7 மாத பயணம்.. ஒருவழியாக கோயில் எல்லையை அடைந்தார் கோதண்டராமர்
பெங்களூர்: பல்வேறு தடைகளை தாண்டி கோதண்டராமர் சிலை பெங்களூர் கோயில் எல்லையை சென்றடைந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெங்களூரில் உள்ள ஈ.ஜி.புரா என்ற பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக கோதண்டராமர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ள கொரக்கோட்டை மலையிலிருந்து 380 டன் எடைக் கொண்ட ஒரே கல் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.
இதிலிருந்து 64 அடி உயரம், 26 அடி அங்குலம் கொண்ட இந்த சிலை அற்புதமாக செய்யப்பட்டது. இதையடுத்து அதை பெங்களூர் கொண்டு செல்ல 240 டயர்கள் கொண்ட பிரம்மாண்ட சரக்கு லாரியில் ஏற்றப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூர் புறப்பட்டது.
லாரி சக்கரங்கள்
சுமார் 350 டன் எடை கொண்ட இந்த சிலையை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல பல்வேறு கடைகள், வீடுகள், மரங்கள் இடிக்கப்பட்டும் அகற்றப்பட்டும் உள்ளன. அதிக எடையினால் லாரியின் சக்கரங்கள் வெடித்தன.
கோதண்டராமர் சிலை
இது போன்று பல்வேறு தடைகளை தாண்டி ஜனவரி 31-ஆம் தேதி கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரிக்கு சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டது.
மண் பாதை
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சிலையைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 13 நாட்களாக அந்த சிலை நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மண் பாதை அமைக்கப்பட்டது.
கோயில் எல்லை
இதன் மூலம் ஆற்றை கடந்த கோதண்டராமர் ஓசூர் பேருந்து நிலையம் வழியாக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை சென்றடைந்தார். சுமார் 300 கி.மீ. தூரத்தை கடந்த 7 மாதங்களாக கடந்த கோதண்டராமர் தற்போது ஏ.ஜி.புரா கோயிலின் எல்லையை அடைந்துள்ளார். இந்த சிலைக்காக மொத்தம் 2.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதில் பயணத்துக்கு மட்டுமே ஒன்றரை கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.