எப்போதும் குபுக்கென அழும் குமாரசாமி.. அன்னிக்கு மட்டும் குபீர் குஷிக்கு மாறியது ஏன்???
Recommended Video
பெங்களூர்: ஆட்சி கவிழ்ந்தபோதிலும் தான்தான் மகிழ்ச்சியான நபர் என மஜத தலைவரும் கர்நாடக முதல்வராக இருந்தவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த மாதம் முதல் நிலவி வந்த அரசியல் குழப்பம் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. அதாவது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை கவிழ்க்கும் விதத்தில் 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை குமாரசாமி கொண்டு வந்தார். அதன் மீது 3 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் 99 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்தது.
மகிழ்ச்சியான நபர்
கடந்த 14 மாதங்களில் கூட்டணி ஆட்சியினர் கொடுத்த குடைச்சலை மேலோட்டமாக சுட்டிக் காட்டி பொதுவெளியில் அழுத வண்ணம் காணப்பட்டவர் குமாரசாமி. ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற அவர் இந்த தருணத்தில் மகிழ்ச்சியான நபர் தான்தான் என தெரிவித்தார்.
வளர்ச்சி
இது பெரும் ஆச்சரியத்தை தந்தது. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன். ஏனென்றால் கடந்த 14 மாதங்களில் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன்.
தருணம்
பல்வேறு சோதனைகள் வந்த போதிலும் மக்களுக்கான எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். எனவே இன்று எனது தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தாலும் இத்தனை நாட்கள் மக்களுக்காக உழைத்தேன் என்ற நினைவுகளுடன் செல்கிறேன். எனவே இந்த தருணத்தை மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
முன்னேற்றம்
அதிருப்தி எம்எல்ஏக்களை மீண்டும் அழைத்து வர ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டோம். எனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. துரோகத்தை என்றுமே ஊக்குவிக்க முடியாது. இனி நான் சுதந்திரமானவன். மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று தெரிவித்தார் குமாரசாமி.
கட்சியில்
இதே கருத்தை முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் பாஜக கூடாரத்துக்கு சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படமாட்டாது என குறிப்பிட்டிருந்தார்.