3 அமைச்சர்களின் பதவியை பறிக்க குமாரசாமி முடிவு.! மக்களவை தேர்தலில் மகன் தோற்றதால் அதிரடி
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், மண்டியா தொகுதியில் போட்டியிட்ட தனது மகன் நிகில் தோற்றதையடுத்து, 3 எம்.எல்.ஏ-க்களின் அமைச்சர் பதவியை பறிக்க மாநில முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டியா தொகுதியில் போட்டியிட்ட நிகிலுக்காக, 8 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூன்று அமைச்சர்கள் பணியாற்றியும், தோல்வியை சந்தித்துள்ள அதிர்ச்சியிலிருந்து குமாரசாமி இன்னும் மீளவில்லை.
மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாா புட்ட ராஜு, நிகில் மட்டும் இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன். மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி மட்டுமின்றி நான் ஏற்றுள்ள அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என சவால் விடுத்தார்.
தற்போது சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவிடம், நிகில் தோற்று போனதால் தானே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளார் புட்ட ராஜு.
மண்டியா மாவட்டத்தில் உள்ள மற்ற அமைச்சர்களான மகேஷ் மற்றும் தம்மண்ணா ஆகியோரையும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை மாற்றி அமைக்கும் போது மண்டியாவில் உள்ள எட்டு எம்.எல்.ஏ-க்களில் முக்கியமான சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க குமாரசாமி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தற்போது 8 எம்.எல்.ஏ-க்களுக்கும் அமைச்சர் பதவி கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள, தற்போது மூன்று அமைச்சர்களின் பதவியை பறித்து அதனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க குமாரசாமி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மண்டியா மக்களவை தேர்தலில் நடிகர்களின் ஆதரவை பெற்று, சுயேச்சையாக களமிறங்கிய நடிகை சுமலாதா அம்பரீஷ் அபார வெற்றி பெற்றார். ஆனால் 8 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 அமைச்சா்களை களமிறக்கி வியூகம் அமைத்தும், நிகில் தோற்றதையடுத்து குமாரசாமி இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளார் என கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.