கர்நாடக அரசியலில் திருப்பம்.. காங்., அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ் ஒருவழியாக திருப்தி எம்எல்ஏ ஆனார்
பெங்களூரு: திங்கட்கிழமை கர்நாடக சட்டமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு, காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் ஒருவரான எம்.டி.பி.நாகராஜ் ஒருவழியாக சமாதானமாகி காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க சம்மதித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இயங்க உள்ளதாக, எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜ் அறிவித்துள்ளார். தலைவர்கள் அனைவரும் ஒருசேர காங்கிரஸ் கட்சியிலேயே தம்மை தொடருமாறு கோரியதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது, மேலும் பெரும்பாலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நாங்கள் மீண்டும் எங்கள் வசமாக்குவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களில் சிலர் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற சம்மதித்துள்ளதாக கூறப்பட்டது. இத்தகவல் அங்கு நிலவும் அரசியல் நெருக்கடியில் திடீர் திருப்பமாக கருதப்பட்டது இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான நாகராஜ் தற்போது சமாதானமாகியுள்ளார்.
கர்நாடக பேரவை நாளை மறுநாள் மீண்டும் கூட உள்ள நிலையில், பெங்களூருவில் துணை முதல்வர் பரமேஸ்வரா, அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெங்களூரு புறநகரில் வசிக்கும் அதிருப்தி எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜை அவரது வீட்டில் சந்தித்து ராஜினாமாவை திரும்ப பெறுமாறு அவர்கள் கோரினர். அவர்களின் சமாதானத்தை ஏற்ற நாகராஜ், ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.
Karnataka CM HD Kumaraswamy, rebel Congress MLA MTB Nagaraj, and Congress leader Zameer Ahmed Khan at the residence of Congress Legislature Party (CLP) leader Siddaramaiah's residence in Bengaluru pic.twitter.com/uIxlghJ44k
— ANI (@ANI) July 13, 2019
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினேன். மற்றொரு எம்எல்ஏ-வான சுதாகரிடமும் கலந்து ஆலோசித்து முடிவை சொல்வதாக கூறியுள்ளேன்.
மேலும் சுதாகரை சமாதானப்படுத்தி விட முடியும் என்று தாம் நம்புவதாகவும், நாகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் இல்லத்தில் வைத்து, அதிருப்தி எம்எல்ஏவான எம்.டி.பி.நாகராஜை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.
சித்தராமையாவின் வீட்டில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் ஜமீர் அகமது கான் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர்கள் அனைவரும் நாகராஜை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.