மத்திய அரசின் விவசாய சட்டங்களை கொஞ்ச நாளைக்கு பயன்படுத்தி பார்க்கலாமே- சொல்வது கர்நாடகா 'குமாரசாமி'
பெங்களூரு: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஒரு சில வருடங்களுக்கு பரிசோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்குமாறு கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் இந்த சட்டங்களை ஆதரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்டமாக 29-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து உள்ள விவசாயிகள், இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரையில் போராட்டத்தை கைவிட போவதில்லை என அறிவித்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் கருத்து கூறி வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகின்றன. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை ஒரு சில ஆண்டுகள் பயன்படுத்தி பார்க்கலாம் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி எல்லையில் போராட்டக் களத்தில் மாரடைப்பால் இரு விவசாயிகள் மரணம்
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், வேளாண் துறை தீய வலையில் சிக்கி இருப்பதாக பல்வேறு தரப்பில் கருத்து நிலவுகிறது. எனவே இதனை அறிய வேளாண் சட்டங்களை ஒரு சில ஆண்டுகளுக்கு பரிசோதித்து பார்க்கலாம். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு முறையான ஒருங்கிணைப்பு தேவை.
ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்த அனுமதிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். சரியாகச் செயல்படவில்லை என்றால் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாயிகளுக்கு அவர் உறுதியளித்துள்ளார். இது நல்ல கருத்துதான் என்று குமாரசாமி தெரிவித்தார்.