மகனுக்கு நடந்தது தெரியாமலேயே போய்விட்டாரே.. சித்தார்த்தா குடும்பத்தினரிடம் தொடரும் சோகம்
Recommended Video
பெங்களூரு: மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே சித்தார்த்தாவின் தந்தை கோமாவிலேயே உயிர் இழந்தது சித்தார்த்தா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் காபி டே மூலம் காபி விற்பனையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எழுப்பியவர் சிக்மங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சித்தார்த்தா. இவரது தந்தை கங்கய்யா ஹெக்டே. இவர்களது மூதாதையர்கள் ஆண்டு ஆண்டுகாலமாக காபி கொட்டை உற்பத்தி செய்து வந்தனர்.
அதனை விரிவுபடுத்தி இந்தியாவின் இளைஞர்களை கவரும் வகையில் காபி டே என்ற ஆடம்பர கடைகளை உருவாக்கினார். இந்த கடைகள் இந்திய இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பெரும் தொழில் அதிபராக சித்தார்த்தா உயர்ந்தார். இதற்காக கடுமையாக உழைத்த சித்தார்த்தா இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கடன் தொல்லை காரணமாக நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் சித்தார்த்தாவின் குடும்பத்தினர், காபி தோட்ட பணியாளர்கள், இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் பல்லாயிரம் காபி டே ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
மிகப்பெரிய சாம்ராஜ்யம்
சித்தார்த்தா மிகப்பெரிய தொழில் அதிபராக உயருவதற்கு அவரது தந்தை கங்கய்யா ஹெக்டே முதல் காரணம். அவரது தந்தையிடம் இருந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பதை சித்தார்த்தா கற்றுக்கொண்டார். அப்படித்தான் நடந்தார். அதனால் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க அவரால் முடிந்தது என குடும்பத்தினர் சோகத்தை விவரித்தனர் .
மனம் வருந்திய சித்தார்த்தா
இந்நிலையில் சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டேவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டது. கோமா நிலையில் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கய்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில தினங்களுக்கு முன்பு கூட சித்தார்த்தா நேரில் வந்து பார்த்து தந்தையின் உடல்நிலையை கண்டு மனம் வருந்தியுள்ளார்.
மகன் உயிரிழந்தது தெரியாது
ஆனால் அடுத்த மூன்று நாளில் சித்தார்த்தா கடன் தொல்லையால் ஆற்றில் குதித்து உயிரைவிட்டார். இது எதுவும் தெரியாமலேயே சிகிச்சை பெற்று வந்த கங்கய்யா நேற்று காலை உடல் நிலை மோசமடைந்து கோமாவிலேயே உயிரிழந்தார். இதனால் மகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா உயிரை விட்டிருப்பது சித்தார்த்தா குடும்பதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.