காங்கிரசை கழற்றிவிட்டு பாஜகவுடன் சேருகிறதா மஜத? குமாரசாமி, எடியூரப்பா என்ன சொல்றாங்க தெரியுமா?
பெங்களூர்: பாஜகவுடன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்காது என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பாஜக தரப்பிலும் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மூன்று மஜத எம்எல்ஏக்களும் பதவி விலகியுள்ளனர்.
சபாநாயகர் இன்னும் அந்த ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த நிலையில் 105 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட பாஜகவுடன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக நேற்று இரவு திடீர் தகவல் வெளியானது.
சந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்
இதற்கு காரணம், குமாரசாமிக்கு நெருக்கமான அமைச்சர் சா.ரா.மகேஷ் என்பவர் நேற்று பாஜக மூத்த தலைவரான ஈஸ்வரப்பா மற்றும் மேலிட தலைவரான முரளிதர ராவ் ஆகிய இருவரையும் பெங்களூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்.
காங்கிரசுக்கு கல்தா கொடுத்துவிட்டு பாஜகவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு, இந்த சந்திப்பு, வழி ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், இதை உடனடியாக டுவிட்டரில் மறுத்தார் முதல்வர் குமாரசாமி. அது எதேச்சையான சந்திப்பு என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் எடியூரப்பா, "ஏற்கனவே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பட்ட கஷ்டங்கள் போதும். அந்த கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணியே கிடையாது" என்றார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சாரியா கூறுகையில், பொய் தகவல்களை பரப்புவதில் குமாரசாமி கைதேர்ந்த நிபுணர். இவ்வாறு ஒரு தகவலை பரப்புவதன் மூலம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்று யோசித்து தான் இப்படி ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார், என்றார்.
சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் 208 என்ற அளவில் சரிவடைந்து உள்ள சூழ்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் உதவி இல்லாமலேயே 105 எம்எல்ஏக்களை கொண்ட, பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.