பாஜக என்ன செய்துவிடும்.. அனைத்தையும் எதிர்கொள்ள தயார்.. கர்நாடக சபாநாயகர் சவால்!
தனக்கு எதிராக பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: தனக்கு எதிராக பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியதாக கூறி இவர்கள் 17 பேரும் தகுதி நீக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். கர்நாடக அரசியல் நடந்த திருப்பங்கள் குறித்து அவர் பேசினார்.
என்ன பேட்டி
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பேட்டியில், நாளை கர்நாடக சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். நாளை சட்டசபைக்கு அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக வர வேண்டும். கர்நாடகாவில் நடந்த அரசியல் குழப்பங்கள் என்னை மன அழுத்தத்திற்கு தள்ளியது.
என்ன அழுத்தம்
மன அழுத்தத்தின் கடலுக்குள் நான் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தேன். நான் ஒரு சபாநாயகராக நிறைய கஷ்டங்களை கடந்த சில தினங்களில் அனுபவித்தேன். என்னிடம் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 16 பேர் ராஜினாமா கடிதம் அளித்தார்கள்.
எப்படி காங்கிரஸ்
அதேசமயம் காங்கிரஸ் மற்றும் மஜத கொறடா சார்பாக 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மனு அளிக்கப்பட்டது. இரண்டிலும் நான் அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை. நான் அவர்கள் 17 பேரிடமும் விளக்கம் கேட்டேன். என் முன் ஆஜராகும்படி 17 பேரிடமும் கேட்டேன்.
செய்யவில்லை
ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. அவர்களின் ராஜினாமா கடிதம் சுயமாக எழுதப்பட்டது இல்லை. அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தை பயன்படுத்துவதில் தவறு கிடையாது. எனக்கு எதிராக பாஜக கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
என்ன தீர்மானம்
எனக்கு எதிராகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். பாஜக என்ன செய்ய முடியும். அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரட்டும். எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். நானே கூட சபாநாயகர் பதவியை விலக தயாராகத்தான் இருக்கிறேன். எனக்கு இந்த தொல்லை இல்லாமல் இருந்தாலே போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.