எல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு
பெங்களூர்: கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையிலான மோதல் மேலும் உக்கிரமடைவதாக தெரிகிறது. குமாரசாமி அரசு கவிழ காங்கிரஸ்தான் காரணம் என்று கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்த கட்சித் தலைவர் தேவெ கெளடா தற்போது தனித்துப் போட்டியிடலாம் என்று பேசியிருப்பதால் பிரச்சினை மேலும் விரிவடைந்துள்ளது.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேவெ கெளடா, சட்டசபைக்கு இடைத் தேர்தல் வந்தால் நாங்கள் தனியாக போட்டியிடுவோம். கூட்டணி வைக்க மாட்டோம்.
இடைத் தேர்தலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடுவோம். யாருடனும் சேர மாட்டோம். மீண்டும் தவறு செய்ய மாட்டோம். அனைவருமே தனித் தனியாக நின்று பார்ப்போம் என்றார் அதிரடியாக.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்கவில்லை. முதலில் பாஜக ஆட்சியமைத்தது. ஆனால் பெரும்பான்மையை பூர்த்தி செய்ய முடியாமல் கவிழ்ந்தது. இதையடுத்து காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. குமாரசாமி முதல்வரானார். ஆனால் லோக்சபா தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மிகப் பெரிய அடி கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாஜகவின் "சித்து" விளையாட்டு காரணமாக, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சி
குமாரசாமி ஆட்சி கவிழ சித்தராமையாவின் உள்ளடி வேலைகள்தான் காரணம் என்பது மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் புகாராகும். இதை சித்தராமையா மறுத்துள்ளார். ஆனாலும் மோதல் முடியவில்லை. நாளுக்கு நாள் ஏதாவது ரூபத்தில் பெரிதாகிக் கொண்டேதான் போகிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் தேவெ கெளடா.
இதற்கிடையே, சித்தராமையா இந்த பேச்சு குறித்து கூறுகையில், தேவெ கெளடா தேவையில்லாமல் என்னைக் குறி வைக்கிறார். யார் வளர்ந்தாலும் அவருக்குப் பிடிக்காது, வளரவும் விட மாட்டார். சொந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட வளர விட மாட்டார். ஆனால் எனக்கு எல்லா ஜாதியிலும் நண்பர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.