எடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்!
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் அவரையும் சேர்த்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகா முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் பதவியேற்றார். ஆனால் அமைச்சரவை உடனே பதவி ஏற்கவில்லை. மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று 17 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான லிங்காயத்துகள்தான் பாஜகவின் அபார வெற்றிக்கு காரணமானவர்கள். அதனால் எடியூரப்பாவையும் சேர்த்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்
3 கவுடாக்களுக்கு வாய்ப்பு
மற்றொரு பெரும்பான்மை சமூகமும் ஜேடிஎஸ் கட்சியின் பிரதான வாக்கு வங்கியுமான ஒக்கலிகா கவுடாக்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சி.என். அஸ்வத் நாராயண், ஆர். அசோக் மற்றும் சி.டி.ரவி இந்த 3 பேரும்தான் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள்.
இதர சமூகங்கள்
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூஜாரி மற்றும் ஈஸ்வரப்பா, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், எஸ்டி வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீராமுலு ஆகியோருக்கும் எடியூரப்பா அமைச்சரவையில் இடம்கிடைத்திருக்கிறது. தலித் சமூகத்தினர் 3 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் அமைச்சரான சுயேட்சை நாகேஷ்
பெண் எம்.எல்.ஏ. சசிகலா ஜொல்லே மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர்களில் நாகேஷ், ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசிலும் அமைச்சராக இருந்து பதவி விலகியவர்.
அதிருப்தியில் தட்சிண கர்நாடகா
பெங்களூரு எம்.எல்.ஏக்களான பத்மநாபா நகர் ஆர். அசோக், கோவிந்தராஜநகர் வி. சோமன்னா, ராஜாஜி நகர் நிம்ம சுரேஷ்குமார், மல்லேஸ்வரம் அஸ்வத்நாராயண் ஆகிய 4 பேருக்கு எடியூரப்பா அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் தட்சிண கர்நாடகா, கடலோர கர்நாடகா பிராந்தியங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 13 எம்.எல்.ஏக்கள், 1 எம்.எல்.சி. இருந்தும் தங்களது பிராந்தியங்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பது அப்பகுதியினரின் குற்றச்சாட்டு.
ஜெயித்தால் பதவி
அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜேடிஎஸ், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. சபாநாயகரின் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகையால் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்னரே இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கர்நாடகா ராஜ்பவனில் நடைபெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாண்டியா லோக்சபா சுயேட்சை எம்.பி. சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.