துரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ
பெங்களூர்: சிம்ம சொப்பனம்.. சிம்ம சொப்பனம் என்று சொல்வார்களே, அது நிஜமாகவே இங்கே சிலருக்கு நடந்துவிட்டது. சொப்பனத்திலேயே சிங்கம் வந்தால் பயப்பபடுவார்கள் என்றால், நேரில், அதுவும் பக்கத்தில் வந்து நின்று விரட்டவும் ஆரம்பித்தால், அவர்கள் கதி என்னவாகும்.
இப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. பதறியடித்து ஓடியவர்களில் சிலர் இதை செல்போனில், வீடியோவாக எடுக்க, அது இப்போது வைரலாக சுற்றி வருகிறது. பார்க்கும் நமக்கே திக், திக் உணர்வை தருகிறது என்றால், நேரில், சிங்கத்தை பார்த்தவர்கள், நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
இந்த சம்பவம் பெல்லாரியிலுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது. உயிரியல் பூங்காவிற்குள் சஃபாரி ஜீப்பில் சுற்றுலா பயணிகளை வனத்துறை ஊழியர்கள் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி அழைத்துச் சென்றபோதுதான், திடீரென ஒரு சிங்கம் கடுப்பாகிவிட்டது.
யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுவது என்று பஞ்ச் மட்டும்தான் அடிக்கவில்லை, மற்றபடி, பதறவைத்துவிட்டது. ஜீப்பை நோக்கி அது ஓடிவர, அலர்ட் ஆன, ஜீப் டிரைவர், ஜீப்பின் வேகத்தை கூட்டி கிளம்பினார். ஆனால் சிங்கம் விடவில்லை. முன்னால் ஓடுவது, பெரிய சைஸ் காட்டெருமை என நினைத்துவிட்டதோ என்னவோ ஜீப்பை விரட்ட ஆரம்பித்தது. ஜீப்புக்குள் இருந்தவர்கள் பயத்தில், அலற ஆரம்பித்துவிட்டனர்.
நல்லவேளையாக ஜீப் டிரைவர் வேகத்தை கூட்டினார். சிறிது தூரம் ஓடிப்பார்த்த சிங்கம், பசி இல்லை என்பதை உணர்ந்து, போனால் போகட்டும் என விட்டுவிட்டது. இந்த வீடியோ இப்போது வெளியாகி பல சோஷியல் மீடியாக்களிலும் வைரலாக பரவி வருகிறது.