"கடை எப்ப சார் திறப்பீங்க"..ஒருத்தர் ரூ.52,000.. அவரை மிஞ்சி ரூ.95,000 பாட்டில் வாங்கிய இன்னொருத்தர்
பெங்களூருவில் 52,800 ரூபாய்க்கு மதுபானம் வாங்கி உள்ளார் நபர் ஒருவர்
பெங்களூரு: "கடை எப்ப சார் திறப்பீங்க" என்று நாள்கணக்கில் காத்திருந்தார்கள் போலும்.. ஒரே நாளில்... ஒரே கடையில்.. ஒரே ஒரு நபர் மட்டும் 52 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி உள்ளார்.. இவருக்கு டஃப் தரும்வகையில், இன்னொரு நபர் ரூ.95 ஆயிரத்துக்கு சரக்கு வாங்கி உள்ளார்.. மதுபானங்கள் வாங்கியதற்கான இந்த பில்-களும் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி, அனைவருக்கும் கிறக்கத்தை வரவழைத்து வருகிறது.
Recommended Video
நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
அதனால் நேற்று காலை முதலே குடிமகன்கள் குழும தொடங்கிவிட்டனர்.. மதுக்கடைகளில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்ற விதிகள் உள்ள போதிலும் கடையை எப்போது திறப்பார்கள் என்ற ஒரே ஒரே கேள்வியை தவிர எதுவுமே மண்டையில் ஏறவில்லை.
பெங்களூரு
சுமார் 1 கிமீ தூரத்திற்கும் மேல் வரிசையில் நின்றனர்... சிலர்தான் வரிசையில் நின்றனர்.. மேலும் பலர் முண்டியடித்து, நெருக்கி கொண்டு, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.. சில இடங்களில் போலீசாராலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் கர்நாடகா மாநிலம்தான் ஏகப்பட்ட பரபரப்பை தந்துவிட்டது.. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
லத்தி சார்ஜ்
குறிப்பாக பெங்களூருவில் மதுவுக்காக போலீஸ் லத்தி சார்ஜ் நடந்தது.. ஆனாலும் அங்குள்ள ஒரு மதுக்கடை முன்பு ஆண்கள் ஒரு வரிசை என்றால், பெண்கள் ஒரு வரிசை என்று தனி தனி வரிசைகள் களைகட்டின.. கொளுத்தும் வெயில் என்றுகூட இவர்கள் பார்க்கவில்லை.. இதில் பெண்கள் வரிசைக்கு மட்டும் சரக்குகள் தரப்பட்டு, வேகமாக வாங்கி கொண்டு போனார்களாம்.. இதைப்பார்த்த ஆண்கள் வரிசையில் இருந்தவர்கள் காதில் புகையே வந்துள்ளது..
52 ஆயிரம்
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள இன்னொரு கடை மேலும் அதிர்ச்சியை தந்துள்ளது.. அந்த கடையில் ஒரே ஒரு நபர் மட்டும் 52 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி உள்ளார்.. அதுமட்டுமல்ல, அதற்கான பில் சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. வெள்ளை கலர் பேப்பரில் லிஸ்ட் நீளமாக தெரிகிறது.. பொதுவாக, சில்லரை கடையில் மொத்தமாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.. அதனால் அந்த கடை ஊழியர் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பு
அவர் மட்டுமில்லை, 52 ஆயிரத்துக்கு சரக்கு வாங்கியவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த நபர் யார் என்று தெரியவில்லை.. அவர் யார் என்பதை பார்க்க மற்ற குடிமகன்கள் ஆவலாக இருக்கிறார்கள்! இந்த செய்தி வைரலாகும்போதே மற்றொரு செய்தி ஒன்று போட்டியாக வந்துவிட்டது. இன்னொரு நபர் ரூ.95 ஆயிரத்துக்கு சரக்கு வாங்கி உள்ளார்.. இவரும் பெங்களூர்தான். இதுதொடர்பான பில்லும் வைரலாகி வருகிறது. இவர் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை.
ரூ.95 ஆயிரம்
எத்தனையோ பேர் வரிசையில் காலையில் இருந்து காத்து கிடந்தும் சரக்கு வாங்காமல்திரும்பி சென்றுள்ளனர்.. அவர்கள் எல்லாருமே இந்த பில்களை கண்டு அதிர்ச்சியாயினர். ஆனால், அதில் எந்த கடையில் இவைகள் வாங்கப்பட்டவை என்பவை குறித்த தகவல்கள் தெரியவில்லை.. இப்படி 52 ஆயிரிம், 95 ஆயிரம் என்று சரக்குகளை வாங்கிய இவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் சரக்கு அடிக்காமலேயே பலருக்கு தலை கிறுகிறுத்து வருகிறது!