கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எந்த கட்சிக்கு என்ன தேவை என்பது தெரியவந்துள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் என 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
ரமேஷ்குமார்
இந்த நிலையில் இன்று கர்நாடக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா கோரிக்கையின்படி முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டசபையின் பலம்
இதனால் கர்நாடகத்தில் அரசியல் நாடகம் அன்றைய தினத்துடன் முடிவுக்கு வர போகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆளும் கட்சியின் (காங் 78, மஜத 37) பலம் 116-ஆக இருந்தது. இந்த நிலையில் 16 பேரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சட்டசபையின் மொத்த பலம் 209 ஆக இருக்கும்.
100 தான் பலம்
எனவே ஆளும் கூட்டணி ஆட்சிக்கு 105 உறுப்பினர்கள் இருந்தால் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் அக்கூட்டணிக்கோ 101 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் (அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ் மீண்டும் காங்கிரஸ் திரும்பிவிட்டால் 101, இல்லாவிட்டால் 100 தான் பலமாக இருக்கும்).
குமாரசாமி
அதே நேரம் இதுவரை ஆளும் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேச்சைகளும் தற்போது பாஜகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. இதனால் பாஜகவின் பலம் இரு சுயேச்சைகளுடன் சேர்த்து 107 பேர் ஆகும். எனவே யார் ஆளும் கட்சியிலிருந்து பிய்த்து கொண்டு ஓடுவர், யார் திரும்ப வருவர் என்பதை பொறுத்தே குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா என்பது தெரியவரும்.