கேபிஎன் பஸ் எரிப்புக்கு பிறகு பெங்களூர் கண்ட மிகப்பெரிய தீ விபத்து.. ஒரு ரீவைண்ட்
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் 42 கேபிஎன் பஸ்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தீ விபத்து இன்று பெங்களூர் விமான கண்காட்சியில் அரங்கேறியுள்ளது.
2016ம் ஆண்டு, செப்டம்பர் மாத காலகட்டத்தில், காவிரி பங்கீடு விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா நடுவே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்புப்படி, தண்ணீர் வழங்க கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. தமிழகம், இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது. இதனால் கன்னட அமைப்பினர் கடும் கோபம் கொண்டனர்.
கேபிஎன் பஸ்கள்
பெங்களூர் உட்பட பல பகுதிகளிலும், தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெங்களூரில் செப்டம்பர் 12ம் தேதி வன்முறை, வெறியாட்டமாக மாறியது. நகரின், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பெண் காரணம்
இளம் பெண் ஒருவர் பெட்ரோல், டீசலை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரித்தபோது, வட கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பாக்யஸ்ரீ என்ற பெண் இதன் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. கூலி வேலை செய்த அந்த பெண், இத்தனை வாகனங்களை எரிப்பதற்கு உதவியிருந்தார்.
வன்முறை
அந்த அளவுக்கு வன்முறை எண்ணம் பெண்களிடமும் ஊடுருவியிருந்ததை பார்த்து காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், கேபிஎன் பஸ் எரிக்கப்பட்ட வீடியோ நாடு முழுக்க வைரலானது. சில கன்னட அமைப்பினர் எரிக்கப்பட்ட பஸ் முன்பாக நின்று எடுத்த போட்டோ செல்ஃபிக்களும் வைரலாகின.
மோசமான விபத்து
இந்த நிலையில், பெங்களூரில் இன்று அதன்பிறகு மொத்தமாக வாகனங்கள் எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கேபிஎன் பஸ் எரிப்புக்கு பிறகு, 3 வருடங்களுக்கு நடுவே, பெங்களூரில் நடைபெற்ற மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும். கேபிஎன் பஸ்களை போலவே, இன்றும், பெங்களூர் ஏர் ஷோவில் கார்கள் வரிசையாக தீ பிடித்து எரிந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தன. ஏர்ஷோ கார் விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள், எரிந்து நாசமாகியுள்ளன.