"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்
இறந்த மனைவியை மெழுகு சிலையாக கணவன் வடித்து வைத்துள்ளார்
பெங்களூர்: "வா மாதவி வா.. இப்படி வந்து சோபாவில் என் பக்கத்துல உட்காரு" என்று சொல்வது போலவே இருக்கிறது ஒரு காட்சி.. உயிரிழந்த மனைவிக்கு மெழுகு சிலையை தயாரித்து, தன் புதுவீட்டு கிரகப்பிரவேசத்தை பாசமிகு கணவர் நடத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலம் கோபல் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீனிவாஸ் குப்தா... இவர் ஒரு பிசினஸ்மேன்.. மனைவி பெயர் மாதவி.. கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் மாதவி உயிரிழந்துவிட்டார்.
இவரது மறைவுக்கு பிறகு அந்த குடும்பம் சோகத்தில் பீடித்து கொண்டது.. யாராலும் மாதவியை மறக்கவும் முடியாமல் கண்ணீருடனேயே நாட்களை நகர்த்தினர்.. மாதவிக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசையாம்.. அதனால் கணவர் ஶ்ரீனிவாஸ் தன்னுடைய மனைவியின் விருப்பப்படி வீடு கட்டினார்.. அந்த வீடு முழுக்க முழுக்க மாதவி ஆசைப்பட்டபடியே இருந்தது.. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டினார்.
கடைசியில் கிரகபிரவேசம் நடத்த ஏற்பாடானது.. ஆனால், இந்த வீடு கட்டியதே மாதவிக்காகதான்.. அவர் இல்லாமல் எப்படி? என்று ஸ்ரீனிவாஸ் மனம் கனத்து போனது.. உடனே மாதவியின் மெழுகு சிலையை உருவாக்க திட்டமிட்டார்... அதன்படி மெழுகு சிற்பக் கலை நிபுணர் ரக்னனோவர் என்பரின் உதவியை நாடினார்.. அப்படியே அச்சு அசலாக மாதவி மெழுகுடன் உருவானார்.
தத்ரூபமாக அந்த சிலை உருவாக்கப்பட்டது.. அந்த சிலையை கிரகபிரவேசத்தின்போது நடுவீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டார்.. பிறகு மாதவியுடன் எப்படி வழக்கமாக சோபாவில் உட்கார்ந்திருப்பாரோ, அதேபோல, அந்த மெழுகு சிலையை சோபாவில் வைத்து விட்டு, அதற்கு பக்கத்திலேயே ஸ்ரீனிவாஸ் உட்கார்ந்து கொண்டார்.
பிறகு தன்னுடைய 2 மகள்களையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். அதேசமயம், மாதவியுடன் தனியாக ஒரு போட்டோவை மறக்காமல் எடுத்து கொண்டார் ஸ்ரீனிவாஸ். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பட்டுப்புடவை, நகை, சிரிப்புடன் மாதவி அழகாக இருக்கிறார்.. அவர் உயிருடன் இருந்திருந்தால் எப்படி சந்தோஷப்பட்டிருப்பாரோ, அதே உணர்வுதான் இந்த போட்டோக்களை பார்க்கும்போது நமக்கும் வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை!
பொதுவாக, ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லும்போதே அந்நியோன்யம் அங்கு பிறந்துவிடுகிறது.. "இவள் எங்கே போய்விடப்போகிறாள்", "இவன் எனக்குதானே" என்ற எண்ணம் தாம்பத்தியத்தில் ஆரம்பத்திலேயே தழைக்க தோன்றிவிடுகிறது.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் திடீரென தன்னை விட்டு பிரியும்போது, உள்ளக்கிடக்கைகளை சொல்லி மாளாது.. சொல்லவும் தெரியாது.
அப்படித்தான் ஸ்ரீநிவாஸ் போன்றோரின் உணர்வுகளும் மனக்குவியலாக குவிந்து கிடக்கிறது.. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த மெழுகு சிலை வடிப்பு... இந்த சம்பவத்தை மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாக அல்லது விசித்திரமாககூட தோன்றும்.. ஆனால், உணர்வுள்ளவர்களுக்குதான் தெரியும் இது எவ்வளவு வலி நிறைந்தது என்பது!