300 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த 'யமஹா' பைக்.. அதுவும் பெங்களூரில்.. விடவில்லை போலீஸ்! பரபர வீடியோ
பெங்களூர்: நம்ம ஊர் ரோட்டில்.. அதுவும் பெங்களூர் மாதிரி ஒரு நகரில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மையில் அப்படி யமஹா பைக் ஒன்றில் அசாத்திய வேகத்தில் பயணித்து சிக்கி உள்ளார், பணக்கார வாலிபர் ஒருவர்.
காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.
Recommended Video
பெங்களூர், ஓசூர் சாலையில், பொம்மனஹள்ளி பகுதியில் ஆரம்பித்து, எலக்ட்ரானிக் சிட்டி வரை சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் உள்ளது.
எலக்ட்ரானிக் சிட்டியில் குவிந்துள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர், டோல் கொடுத்து இந்த பாலத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் இருந்து பெங்களூர் நகருக்குள் செல்லக்கூடிய வாகனங்களும், டிராபிக் மற்றும் சிக்னல்களை தவிர்ப்பதற்காக, இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவதுண்டு.
நாளை முதல்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி
அதி வேகம்
ஆனால் பெங்களூரில் ஜூலை 14ம் தேதி முதல் முழு லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த மேம்பாலத்தில் ஓரளவுக்கு மட்டுமே வாகன போக்குவரத்து இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு அதிவேகத்தில் பைக் ஓட்டி சாகசம் செய்ய நினைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பணக்கார இளைஞர் முனியப்பா.
கேமராவில் பதிவான வீடியோ
தனது ஹெல்மெட் பகுதியில் கேமராவை மாட்டிக்கொண்டு, பைக்கை அதிவேகத்தில் இயக்கியுள்ளார். அந்த கேமராவில் ஸ்பீடோமீட்டர் நன்கு தெரியும்படி வசதி செய்துள்ளார். ஆட்டோக்கள், கார்கள் என பல வாகனங்கள் அந்த சாலையில் சென்று கொண்டிருக்கும்போதும், அவற்றுக்கு இடையே புகுந்து அதிவேகமாக செல்கிறது அந்த பைக்.
299 கி.மீ வேகத்தில் பைக்
ஒரு கட்டத்தில் 299 கிலோமீட்டர் வேகத்தை ஸ்பீடோமீட்டர் காட்டுகிறது. வீடியோவில் பார்க்கும் நமக்கே இந்த வேகம், அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் பிறகுதான் அவர் வேகத்தை குறைக்கிறார். 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அதை ஒரு சாகசமாக தனது நண்பர்களிடம் சொல்வதற்காக இந்த வீடியோவை அவர் எடுத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. 299 கி.மீக்கு மேல் அவர் வேகமாக சென்றது அந்த வீடியோவில் பதிவாகவில்லை.
|
வைரலான வீடியோ
இதன் பிறகு ப்ளூபியஸ்ட்46 என்ற பெயரிலான, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோ பெங்களூரில் வைரலாக சுற்றி வந்த நிலையில், காவல்துறையின் கண்களுக்கு அது பட்டது. உடனடியாக போலீசார் விசாரணையை துவக்கி அந்த பைக் யாருடையது என்பதை கண்டுபிடித்து, தற்போது முனியப்பாவை கைது செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைத்துள்ளனர்.
மக்களுக்கு ஆபத்து
இந்தியாவின் நெடுஞ்சாலைகளே, அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு பாதுகாப்பான வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெங்களூரு மாதிரி மக்கள் நெரிசல் உள்ள ஒரு நகரில், மேம்பாலத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் ஒருவர் சென்றால் அது அவருக்கு மட்டுமல்ல, அந்த சாலையில் செல்லக்கூடிய பிறர் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் காவல்துறை இந்த விஷயத்தை கடுமையாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.
ரேஸ் நடத்தும் பாலம்
ஏற்கனவே இந்த பாலத்தில் சிலநேரங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணித்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவ்வப்போது இந்த மேம்பாலத்தில் கார்கள் மற்றும் பைக்குகளில் காவல்துறைக்கு தெரியாமல் இளைஞர்கள் ரேஸ் நடத்துவதும் வழக்கம். காவல்துறை தீவிர ரோந்து நடத்தி சமீபகாலமாக அதை கட்டுப்படுத்தி உள்ளது.
அப்படி என்ன பைக்?
300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அளவுக்கு அது என்ன பைக் என்று விசாரித்து பார்த்தால், யமஹா நிறுவனத்தின் R1 மாடலைச் சேர்ந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்காகும். அதிகபட்சமாக 200 பிஹெச்பி அளவுக்கு ஆற்றல் வெளிப்படுத்தக் கூடியது இந்த பைக். வழுக்குவதில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் அம்சம், அதி விரைவாக செல்ல வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. 2018ல் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என்கிறார்கள்.
இந்திய சாலைகள்
50 லட்ச ரூபாய் கார் கூட இந்த வேகத்தில் செல்ல முடியாது. அதிகபட்சம் என்று பார்த்தாலும் 160 அல்லது 170 கிலோமீட்டர் வேகத்தில்தான் ஹைவேக்களில், கார்கள் பயணிக்கிறது. அதுவும் சில நிமிடங்கள்தான் முடியும். ஆனால் இந்த பைக் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள வேகக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இருசக்கர வாகனங்களுக்கு, விற்பனைக்கு முன்பே வேகக்கட்டுப்பாட்ட்டை நிர்ணயிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.