குக்கர் குண்டுவெடிப்பு.. குமரி, சுசீந்திரம் கோயில்களுக்கு சென்ற மங்களூர் தீவிரவாதி- 'பரபர' பின்னணி
பெங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி முகமது ஷாரிக், கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் அந்தக் கோயில்களில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட முகமது ஷாரிக் திட்டமிட்டாரா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தினம் தினம் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், கன்னியாகுமரியில் உள்ள கோயில்களுக்கு முகமது ஷாரிக் சென்று வந்திருப்பது தென் மாவட்ட மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு! கோவையில் முகாமிட்ட முகமது ஷாரிக்? லாட்ஜ் ஓனருக்கு வந்த சிக்கல்!
தென்னிந்தியாவை உலுக்கிய குக்கர் குண்டவெடிப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான முகமது ஷாரிக் (27) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முகமது ஷாரிக் தனது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயருடன் கோவை, மதுரை, கேரளாவின் கோழிக்கோடு, கர்நாடகாவின் மங்களூர், உடுப்பி உள்ளிட்ட இடங்களை சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் அந்த இடங்களில் நாசவேலையில் ஈடுபட சதி செய்ததை என்ஐஏ போலீஸார் கைது செய்தனர்.
ஆபாசப் படங்கள் - ஸ்லீப்பர்செல்கள்
மேலும், செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி சில இளைஞர்களை இழுத்து பின்னர் அவர்களை ஸ்லீப்பர் செல்களாக முகமது ஷாரிக் மாற்றியிருப்பதும் தெரியவந்தது. மங்களூர் கடலோரப் பகுதிகளில் இதுபோல 40 ஸ்லீப்பர்கள் செல்கள் இருப்பதும் என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதை போல வெடிகுண்டு பயிற்சிகளையும் ஷாரிக் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கும் பணியில் என்ஐஏ அதிகாரிகளும், கர்நாடகா போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கோயில்களுக்கு..
இந்நிலையில், தமிழகத்தில் மதுரை, கோவை மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் முகமது ஷாரிக் வந்து சென்றிருப்பதை அவரது செல்போன் மூலம் என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரத்தில் இருக்கும் ஒரு லாட்ஜில் வேறு பெயரில் முகமது ஷாரிக் தங்கியிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சமயங்களில், அவர் அதிகாலையிலேயே வெளியே சென்று இரவில் தான் லாட்ஜுக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. எனினும், அவர் எங்கெங்கலாம் சென்றார் என உறுதியாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
ஆனால், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோயில் குறித்து லாட்ஜ் ஊழியர் ஒருவரிடம் முகமது ஷாரிக் விசாரித்ததை என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. மேலும், இடலாக்குடி, மணவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிலரை முகமது ஷாரிக் சந்தித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றன. எனவே, கன்னியாகுமரியில் நாசவேலையில் ஈடுபட ஷாரிக் திட்டமிட்டார் என்பது தொடர்பாக மங்களூரு போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் அந்தப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.