மங்களூரு குண்டு வெடிப்பு: ஷரிக்கிற்கு ஐ.எஸ் தொடர்பு? கேரளா சென்றது ஏன்? போலீஸ் விசாரணை தீவிரம்
பெங்களூர்: மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரிக், கேரளாவின் ஆலுவா நகரில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து 5 நாட்கள் தங்கியிருந்ததும், அந்த லாட்ஜில் வைத்து ஆன்லைன் வழியாக சில பொருட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவின் நாகுரி பகுதியில் கடந்த 19 ஆம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடி குண்டு வெடித்து சிதறியது.
இந்த வெடிகுண்டு வெடித்ததில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த ஷரிக் என்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.
மங்களூரு சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பயங்கரவாத செயல்
காயம் அடைந்த ஷரிக் பயங்கர சதித்திட்டத்துடன் குக்கர் வெடிகுண்டை தயாரித்ததும் நாசவேலையில் ஈடுபட சென்ற போது ஆட்டோவிலேயே வெடி குண்டு வெடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத செயல் என்று தெரிவித்த கர்நாடக அரசு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து விசரணையை தொடங்கிய என்.ஐ.ஏ ஷரிக்கின் தொடர்பில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
5 பேரிடம் விசாரணை
ஷரிக்கிற்கு வீடு கொடுத்த வீட்டு ஓனர், செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்த கோவையை சேர்ந்த ஆசிரியர் சுரேந்திரன் என 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் கோவை, நாகர்கோவில், கேரளாவிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜமேஷா முபினை ஷரிக் சந்தித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் புதுபுது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன்.
டெலிகிராம் மேசேஜ் ஆப் மூலமாக
இந்த நிலையில், ஐ.எஸ் இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஷரிக் தொடர்பில் இருந்தாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெலிகிராம் மேசேஜ் ஆப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்கும் யுக்திகளை தனது கூட்டாளிகள் இருவருக்கு ஷரிக் பகிர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஓட்டலில் இருந்து செக் அவுட்
அதேபோல், ஷரிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் பெரும் தொகை வழங்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இதற்கிடையே, ஷரிக் கேரளா மாநிலம் ஆலுவா நகரில் தங்கியிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி ஆலுவா நகரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய ஷரிக், செப்டம்பர் 18 ஆம்தேதி ஓட்டலில் இருந்து செக் அவுட் செய்து இருக்கிறார்.
முபீன் கேரளாவில் தங்கியிருந்ததாக
போலி அடையாள அட்டை மற்றும் இந்து மதத்தை சார்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் வகையில் போலியான பெயருடன் அறை எடுத்துள்ளார். ஓட்டலில் தங்கியிருந்த 5 நாளிலும் ஷரிக் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ஓட்டல் அறையின் கெஸ்ட் புக் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கின்றனர். இதற்கிடையே, கோயம்புத்தூர் கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முபீன் கேரளாவில் தங்கியிருந்ததாக கேரள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.
இருவருமே கேரளாவிற்கு வந்திருப்பதால்..
எனினும், ஷரிக் தங்கியிருந்த நாளில் முபின் கேரளாவில் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் இருவருமே கேரளாவிற்கு வருகை தந்து இருப்பதால் ஒரே நபர்தான் இவர்கள் இருவரையும் இயக்கினாரா? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.