தலை வேறு உடல் வேறாக வெட்டி வீசப்பட்ட ஸ்ரீமதி - கடனுக்காக கொலை செய்த இருவர் கைது
பெங்களூரு: மரணம் கூட நிம்மதியானதாக ஒரு செடியில் இருந்து பூ உதிர்வது போல இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிலரது மரணமோ கொடூரமானதாக நிகழ்கிறது. எதிரிக்குக் கூட இதுபோன்ற ஒரு நிலை வரக்கூடாது என்றுதான் பலரும் வேண்டிக்கொள்ள வேண்டும். மங்களூரு தொழிலதிபர் ஸ்ரீமதியின் மரணமும் கொடூரமானதாக முடிந்திருக்கிறது.
கடன் பிரச்சினையில் அவரை கொன்றவர்கள் வெட்டி கூறு போட்டு வீசியிருக்கின்றனர். மூன்றே நாட்களில் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடனை திருப்பிக் கேட்டதற்கு கொலை செய்திருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தையே உலுக்கிய இளம் தொழிலதிபரின் கொலை வழக்கை 30 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் விசாரித்து முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
சாக்கு மூட்டையில் சடலம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் தேசிய நெடுஞ்சாலை 66ல் கதிரி பார்க் அருகே சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் ரத்தம் படிந்த ஒரு உடலை பார்த்த பாதசாரிகள் பதறிப்போய் போலீசில் கூறினர். மூட்டையை பிரித்து பார்த்த போது வெட்டப்பட்ட பெண்ணின் தலை இருந்தது. உடல் உறுப்புகளை தேடிய போது பண்டுவா கல்லூரி சந்திப்பில் உள்ள பழக்கடை அருகே பெண்ணின் உடல் பகுதியும், பதுவா ஜங்சனில் பெண்ணின் கால்களையும் கைப்பற்றினர். நந்திக்குட்டோவில் சில பாகங்களும், நாகுரியில் இருசக்கர வாகனம் ஒன்று அநாதையாக கிடந்தது.
ஸ்ரீமதி ரெட்டி
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீமதி ஷெட்டி. இவர் அட்டாவர் பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். கணவர் சுதீப்பை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று 30 பேர் கொண்டு தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்தனர்.
புலன் விசாரணை
சாக்குமூட்டைகள் கிடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்த போது ஹெல்மெட் அணிந்த ஒரு உருவம் சாக்குமூட்டையை வீசிச்சென்றது தெரியவந்தது. கடந்த 11ஆம் தேதி சனிக்கிழமையன்று ஸ்ரீமதி வீட்டை விட்டு சென்றுள்ளார் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என்ற தகவல் தெரியவந்தது.
கொலையாளி யார்
கடைசியாக ஸ்ரீமதி நந்திகுட்டே பகுதியில் ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வரும் சாம்சன் என்பவரை சந்தித்தது தெரியவந்தது. அடிக்கடி சாம்சனுக்கு போன் செய்து பேசியுள்ளதும் தெரியவந்தது. நூல் பிடித்து விசாரித்ததில் ஸ்ரீமதியின் உயிருக்கு சாம்சன்தான் எமன் என்று தெரியவந்தது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைதான் கொலைக்குக் காரணம் என்றும் கண்டுபிடித்த போலீசார், கொலையாளியை அமுக்கியுள்ளனர். கொலையாளிகளின் பெயர் ஜோனாஸ் ஜோலின் சாம்சன், 36, விக்டோடியா மத்தியாஸ்,46 என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
பணப்பிரச்சினையில் கொலை
ஸ்ரீமதிக்கு ஃபாஸ்ட் புட் கடை நடத்தி வரும் சாம்சன்தான் எமனாக வந்திருக்கிறான். ஸ்ரீமதியிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கிய சாம்சன். 40000 ரூபாயை மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கிறான். மீதி 60000 ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளான். பலமுறை கேட்டும் தரவில்லை. ஒவ்வொருமுறையில் கடையில் நஷ்டம் என்று கூறியே பணத்தை திருப்பி தரவில்லை.
அடித்துக்கொலை
கடந்த 11ஆம் தேதி சனிக்கிழமை மாலை நேரத்தில் நந்திக்குட்டே பகுதியில் உள்ள சாம்சன் வீட்டிற்கு சென்றார் ஸ்ரீமதி. அங்கே விக்டோடியா மத்தியாஸ் இருந்திருக்கிறார். வழக்கம் போல பணத்தை கேட்கவே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. தனியாக இருந்த ஸ்ரீமதியை அடித்து கொன்று உடலை கூறு போட்டு சாக்கு மூட்டையில் கட்டி பல பகுதிகளில் வீசியிருக்கின்றனர்.
தற்கொலை முயற்சி
காவல்துறையினர் சாம்சன் வீட்டிற்கு சென்று சுற்றி வளைத்தபோது அவன் தற்கொலைக்கு முயற்சித்தான் அவனை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாம்சனின் கள்ளக்காதலி மத்தியாஸை தங்கள் பாணியில் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூற காவல்துறையினரே திகிலோடு கேட்டனர்.
நகைகள் கொள்ளை
ஸ்ரீமதியை கொன்று நகைகள், மோதிரங்களையும் திருடியுள்ளனர் அவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கர்நாடகா மாநிலத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சாம்சன் எற்கனவே ஒரு கொலையை செய்திருக்கிறான் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.