திடீரென மாறும் அரசியல் வானிலை.. ஆளும் கட்சியினர் குஷி.. எரிச்சலில் எடியூரப்பா.. என்ன நடக்கிறது?
பெங்களூர்: கர்நாடக அரசியலில் திடீரென மர்மமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எலியாக இருந்தவர்கள் இப்போது புலியாக மாறியுள்ளனர். புலிகளாக இருந்தவர்களோ, பூனைகளாக மாறியுள்ளதை கவனிக்க முடிகிறது.
ஒன்றல்ல, ரெண்டல்ல.. 16 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தால் எந்த அரசாக இருந்தாலும் இந்நேரத்திற்கு கலைந்திருக்கும். ஆனால், கர்நாடகாவிலோ நிலைமை வேறு. இதுவரை அவர்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.
ஒருவேளை அந்த ராஜினாமாக்களை ஏற்றால், ஆட்சி கலைவது உறுதி. இப்படியான ஒரு சூழலில், முதல்வர் உட்பட ஆளும் வர்க்கத்தில் பெரும் பதற்றம் தென்பட்டது.
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்க, தலைமைச் செயலகம் வந்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகர் என்பவரை, காங்கிரஸ் தலைவர்கள் சட்டையை பிடித்து இழுத்த பதற்றத்தை கூட 2 நாட்கள் முன்பாக பார்க்க முடிந்தது. முதல்வர் குமாரசாமி, மீடியாக்கள் முன்பு வரவே, தயங்கினார். சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பேட்டியின்போதெல்லாம், பாஜகவை கரித்துக் கொட்டினர்.
#correction Bengaluru: BJP MLAs leaving for Ramada resort from state assembly. #Karnataka pic.twitter.com/wT285QLw0x
— ANI (@ANI) July 12, 2019
இன்று நிலைமை வேறு மாதிரி மாறியுள்ளது. ஆளும் கட்சி பிரமுகர்கள் முகத்தில் மகிழ்ச்சி அலை தாண்டவமாடுகிறது. இதைவிட முக்கியமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நேரம் ஒதுக்குங்கள் என்று, சட்டசபையில் முதல்வர் குமாரசாமி, சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். சட்டசபையிலும், துணை முதல்வர் பரமேஷ்வர் மற்றும் குமாரசாமி இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை கவனிக்க முடிந்தது.
சித்தராமையாவும் கூட இன்று மாலை நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, சிரித்த முகத்தோடு இருந்தார். நம்பிக்கை இருப்பதால்தானே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் கோரிக்கைவிடுத்துள்ளார், என்று கூலாக பேட்டியளித்தார் சித்தராமையா. இப்படியாக ஆளும் தரப்பு திடீரென ஏக குஷியாக இருக்கும் நிலையில், எதிர் தரப்பு பாஜக பக்கம் திடீரென நடுக்கம் தெரிகிறது.
இன்று மாலை நிருபர்களிடம் பேட்டியளித்த எடியூரப்பா முகத்தில் கோப அனல் தெரிந்தது. நிருபர்களிடம் சீறினார். அது மட்டுமா.. அனைத்து பாஜக எம்எல்ஏக்களையும் திடீரென பெங்களூர் புறநகரிலுள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இன்றே பாஜக எம்எல்ஏக்கள் ரிசார்ட் போகிறார்கள்.
அதிருப்தி எம்எல்ஏக்களில் சிலர் தங்கள் ராஜினாமாக்களை வாபஸ் பெற முன்வந்துள்ளார்களா? பாஜக எம்எல்ஏக்களில் சிலரை ஆளும் தரப்பு குறி வைத்து இந்த பக்கம் தூக்க முயல்கிறதா என்று பல்வேறு யூகங்கள் கர்நாடக அரசியலில் கிளம்பியுள்ளன. அனைத்துமே ரகசியமாக உள்ளது.