கார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்
பெங்களூர்: கார் அல்லது பைகில் ஒருவரே அமர்ந்து வாகனம் செலுத்தினாலும், முக கவசம் அணிவது கட்டாயம் என்று பெங்களூர் பெருநகர மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் தொடர்பான விதிமுறையில், கார்களில் ஒருவரே அமர்ந்து பயணிக்கும் போது, முக கவசம் அணிவது கட்டாயம் கிடையாது என்று தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு நேர் எதிராக பெங்களூர் மாநகராட்சி நேற்று இரவு முதல் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
காரில் ஒருவரே அமர்ந்து வாகனத்தை ஓட்டினாலும், காரின் கண்ணாடி முழுக்க ஏற்றி விடப்பட்டு இருந்தாலும் அல்லது இறக்கிவிடப்பட்டு இருந்தாலும் அவர் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். இரு சக்கர வாகனங்களிலும் பின்னால் யாரும் அமர்ந்து பயணிக்காவிட்டாலும் பைக்கை ஓட்டுபவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்!
இந்த விதிமுறைகளை மீறி முக கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குபவர் மீது 250 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இப்படி இருந்த விதிமுறையை மாநகராட்சி தளர்த்தி இருந்தது. இப்போது மறுபடியும் விதிமுறையை கடுமையாக்கி உள்ளது. ஹெல்மெட் அணிந்து கொண்டு முக கவசம் போட்டுக் கொள்ளும்போது மூச்சுக்காற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு கண்களை மறைப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். கார்களுக்கும் இதேபோன்ற சங்கடங்கள் ஏற்படுகிறது. ஆனால், மாநகராட்சியோ, தனியாக பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.