அட.. நான் பிரதமர் ஆனது கூட ஒரு விபத்துதாங்க… முன்னாள் பிரதமர் தேவ கவுடா ஓபன் டாக்!
பெங்களூரு: தாம் பிரதமர் ஆனது கூட ஒரு விபத்து தான் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மையமாக வைத்து, 'தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் ஜனவரி மாதம் வெளிவரப் போகிறது. அந்தப் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளை பேசி வருகின்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் அந்த படத்தை திரையிட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், படத்துக்கு தடை விதிக்கப் போவதாகவும் பாஜக கூறி வருகிறது. ஆனால் அதை மறுக்கும் காங்கிரஸ், பாஜக கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனை என்று கூறியது. மத்திய அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே பாஜக கூறுவதாக காங்கிரஸ் தெரிவித்தது.
இந் நிலையில், தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் குறித்து பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:
தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் திரைப்படம் வெளிவர எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் பிரதமர் ஆனது கூட விபத்துதான்' என்று கூறினார்.
1996ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து, தேவகவுடாவை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தன. இந்த முடிவுக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து 1996ம் ஆண்டில் ஜூன் 1ம் தேதி, தேவ கவுடா நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அதன் பின்னர் காங்கிரஸ், தேவ கவுடாவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற பிறகு 1997ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி தமது பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.