மேகதாது.. கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! அவசர ஆலோசனைக்கு குமாரசாமி அழைப்பு
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கேட்ட அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது. இதையடுத்து அணை கட்டுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி முழு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.
ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று தண்ணீர் தராத கர்நாடகா, புதிதாக அணையும் கட்டிக்கொண்டால், சுத்தமாக தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்ற வாதம் தமிழக அரசால் முன்வைக்கப்பட்டு, இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பச்சைக்கொடி
தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தாத கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட பணிகள் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த வரைவு அறிக்கைக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த கர்நாடகாவிற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
ஆனால் அனுமதி கிடைத்த கையோடு அணையை கட்டி விடுவது என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இதையடுத்து டிசம்பர் 6ம் தேதி விரிவான ஆலோசனை கூட்டம் ஒன்றிற்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூரில், கர்நாடக தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கூட்டம்
முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், சித்தராமையா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. முன்னாள் பிரதமரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.தேவகவுடாவும் கூட்டத்தில் பங்கேற்று, அரசுக்கு தனது ஆலோசனைகளை வழங்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மகன் குமாரசாமி ஆட்சிகாலத்தில் மேகதாது அணை பணிகள் துவங்கப்பட்டால், பழைய மைசூர் மாகாணத்திலுள்ள தங்கள் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்பது தேவகவுடாவின் திட்டமாகும். அதேநேரம், கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் தத்தளிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்கு மற்றொரு பேரிடியாக கர்நாடக அரசின் செயல்பாடு அமைந்துள்ளது.